Breaking
Thu. Apr 25th, 2024
(ஊடகப் பிரிவு)
முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஐனரஞ்சக எழுத்தாளருமான எப்.எம்.பைரூஸின் மறைவு சத்திய எழுத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அதிர்ச்சியென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தனது அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளதாவது, மரணத்தின் பிடியிலிருந்து எந்த ஆத்மாக்களும் தப்பிக்க முடியாது.இறைவனின் இந்த நியதிக்கு இன்று ஆத்மார்த்த எழுத்தாளர் எப்.எம்.பைரூஸின் ஆத்மா அடங்கி விட்டது.
எத்தனையோ முஸ்லிம்  தலைவர்களின் நீத்தார் பெருமையை எழுதி. அவர்களின் ஆளுமைகளை எமக்குணர்த்திய மர்ஹும் எப்,எம்,பைரூஸுக்கு நீத்தார் பெருமை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.முஸ்லிம்களின் முதுபெரும் தலைவர்களான எம்,எச்,முஹம்மத்.பதியுதீன் மஹ்மூத்.ஏ.எச்.எம்.அஸ்வர்.பாக்கீர்மாக்கார் ஆகியோருடன் நெருங்கிப் பழகிய அவரால் அரசியலின் ஆழப்பார்வைக்குள் சுழியோட முடிந்தது.இந்தச் சுழியோடல் எழுத்துக்களால் “ஸைத்துல்ஹக்”சத்திய எழுத்தாளர் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.
எல்லோருடனும் இனிமையாகப் பழகிவந்த மர்ஹும் எப்.எம்.பைரூஸின் எளிய சுபாவம் அவரைப் புரிந்து கொள்வதற்கான அளவுகோலாகவே இருந்தது.முஸ்லிம் மீடியாபோரத்தினூடாக இளைஞர்களை ஊடக நெறிக்குட்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் பெரும் ஆளுமைகளாகவே வெளிப்பட்டிருந்தன.
தினகரன்.தினபதி.நவமணி.உதயன் பத்திரிகைகளில் வெளிவந்த அவரது ஆக்கங்கள் முஸ்லிம்  சமூகத்தின் தர்மக் குரல்களாக ஓங்கி ஒலித்தன.அந்தக் குரல்கள் இன்றுடன் நிரந்தரமாக ஓய்ந்துள்ளதை நினைக்கையில் எனது நெஞ்சம் பிரமித்துப் போகின்றது.எல்லாம்வல்ல இறைவன் மர்ஹும் எப்.எம்.பைரூஸின் சமூக சேவைகளைப் பொருந்திக் கொண்டு சுவனபதியை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

Related Post