Breaking
Fri. Apr 19th, 2024

ஒரு விரிவான திட்டத்தின் ஊடாக உள்நாட்டு பொருளாதாரத்தில் தனியார் துறையினது பங்குபற்றுதலை அதிகரிப்பதனை அடிப்படையாகக் கொண்டு, வருமானத்தினை பெறுகின்ற வளங்களைப் பல்வகைப்படுத்துவதற்கான மிக உறுதியானதும், முக்கியமானதுமான நடவடிக்கைகளை குவைத் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, குவைத் வர்த்தக அமைச்சர் காலித் அல் றவ்டான் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் குவைத் நாடுகளுக்கிடையிலான வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“புதிய குவைத்தின் பார்வை – 2035” ன் பிரகாரம் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், வருமானத்தினை அதிகரித்துக்கொள்வதற்கு தேவையான வருமான வளங்களுக்கான மாற்று வழிகளை கண்டுகொள்ளல்  உட்பட பொருளாதார அபிவிருத்தியின் மீது அதீத கவனம் செலுத்தவும், அமீரினுடைய வழிகாட்டுதல்களை அமைச்சர் காலித் அல் றவ்டான் பாராட்டினார்.

தனியார் பொதுத் திட்டங்களை அபிவிருத்திச் செய்வதற்கும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், வெளிநாட்டு தொழில். முயற்சியாளர்களை கவரும் வகையில், வர்த்தக சூழலினை விருத்தி செய்துகொள்வதற்கும் குவைத் நேரடி முதலீட்டு ஆணையம் விருப்பம் கொண்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

2017 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றம் 65 மில்லியனை எட்டியுள்ளது. இலங்கையுடனான வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பினை விரிவுபடுத்துவதற்கு குவைத் என்றும் தயாராகவுள்ளது. குவைத் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான கூட்டு வேலைத்திட்டத்தின் பிரகாரமே இவைகள் நடைமுறைபடுத்தப்படும். 

இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ரீதியிலான தொடர்பினை விரிவாக்கம் செய்வது தொடர்பில், முகங்கொடுக்கின்ற தடைகள் குறித்தும் குழுக்கூட்டத்தின் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் காலித் அல் றவ்டான் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

“21 வருடங்களின் பின்னர் நடைபெற்ற வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான ஆணையத்தின் முதலாவது கூட்டம் இதுவாகும். ஆனாலும், இலங்கையும் குவைத்தும் வர்த்தக ரீதியான உறவினை தொடர்ச்சியாக வேறுவழிகளில் பேணிக்கொண்டு வந்திருக்கின்றது.

இலங்கை மற்றும் குவைத்துக்கிடையிலான வணிக மற்றும்  தொழிநுட்ப நிறுவனத்திற்கான ஆணையம் 1997 ல் நிறுவப்பட்டது. இந்த ஆணையத்தினூடாக இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களினை அதிகரித்துக்கொள்வதில் பாரிய பங்களிப்பினை இவ் ஆணையம் வழங்கியுள்ளது.

குவைத் நாட்டினது உதவிகள் எமது நாட்டினது அபிவிருத்தியில் பாரியதொரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கையில் 25 பாலங்களினது கட்டுமானப்பணிக்காக வழங்கிய உதவியினை குறிப்பிடலாம்” என அமைச்சர் தெரிவித்தார்.

குவைத் கைத்தொழில் மற்றும் வணிக சங்கத்தினது உறுப்பினர் மிஸாப் அல் நிஸ்ப் கருத்து தெரிவிக்கையில், இலங்கையுடன் வர்த்தக முதலீடுகள் தொடர்பில் கைகோர்ப்பதற்கு, குவைத்தின் கைத்தொழில் மற்றும் வணிக சங்கம் விருப்பத்துடன் இருப்பதனை உறுதிப்படுத்தினார்.

-ஊடகப்பிரிவு-

Related Post