Breaking
Fri. Apr 26th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டின் முதலாம் கட்டம் (03) காவத்தமுனை பிரதேசத்தில் இடம்பெற்றபோது, உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எதிர்வரும் பாராளுமன்றத்தில் கட்சி கொள்கைக்கு அப்பால், அனுபவமும் ஆளுமையும் கொண்ட நல்ல அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் எனவும், அந்தவகையில் கண்டியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், வன்னியிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும், கல்குடாவிலிருந்து அமீர் அலியும் இருப்பது என்பது முஸ்லிம் சமுகத்திற்கு வரும் அவலங்களிலும் உரிமை விடயங்களில் ஏற்படக்கூடிய திண்டாட்டங்களிலும் காப்பாக அமையும் என தெரிவித்தார்.

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் என்ற கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும், மட்டக்களப்பு மக்களும் நன்மை அடையும் விதமாக அனுபவம், ஆளுமை கொண்ட நல்ல தெரிவுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கடைசி போராளி உயிரோடு இருக்கும் வரை, இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் குழு எடுத்துக்கொண்ட நல்ல முயற்சிகளையும் பாராட்டிய அவர், வருங்காலத்தில் கல்வி, விளையாட்டு,  போதை ஒழிப்பு என அனைத்து நல்ல விடயங்களின் பக்கம் செல்லவும், தீய விடயங்களிலிருந்து விலகி நடக்கவும், சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமெனவும் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்ன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் கலந்துகொண்டு விசேட உரையாற்றினார்.

இந்நிகழ்வில், பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஆசிரியர், நெளபர், ஜெளபர், சட்டத்தரணி ராசிக், வைத்தியர் அப்தாப் அலி, இணைப்பாளர் மீரான் ஹாஜி, தன்சீல் மெளலவி, வட்டாரக் குழு தலைவர்களான நாஸர், பாறூக், றியாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் முதல் கட்டமாக காவத்தமுனை, தியாவட்டவான், பாலைநகர் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post