Breaking
Thu. Apr 25th, 2024

புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு அவசரக் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில், அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

புத்தளம் மாவட்டத்தில், கரைத்தீவு கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்குத் தேவையான வைத்தியர்கள் இன்மையால், பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கரைத்தீவு வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் தற்போது அங்கில்லாத நிலையிலும், சிற்றூழியரும் வண்ணாத்தவில்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் இருவாரங்களுக்கு மேலாகின்றதாக, பிரதேச மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில், அவசர வைத்திய சேவைகளை நாடும் இப்பிரதேச மக்கள், வைத்தியரின்மையால் பெரிதும் சிரமப்படுவதுடன், அதிக பணச் செலவில் வண்ணாத்தவில்லு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

பொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்து காணப்படும் இம்மக்களுக்குத் தேவையான வைத்திய வசதிகளை செய்து கொடுப்பது, பொதுமக்களின் பிரதிநிதியாகிய எனது கடமை என்பதாக உணர்வதுடன், அதனை நடைமுறைப்படுத்துவது உங்களது பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி ரஹீம் எம்.பி, துரித கதியில் இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்களை நியமிப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (சௌபாக்கிய தெக்ம) தேர்தல் விஞ்ஞாபன கொள்கைக்கு அமைய, இப்பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைக்கு முன்னுரிமையளித்து, தேவையான நியமனங்களை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சுகாதார சேவை பணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Post