Breaking
Thu. Apr 25th, 2024

குவைத் –  இலங்கை கூட்டு அமைச்சர்கள் குழுவின் இரண்டாவது அமர்வு, மிகவும் சாதகமான முடிவுடன் நிறைவடைந்தாக, இலங்கை வர்த்தக திணைக்களம் நேற்று தெரிவித்தது.  இரு நாடுகளுக்கிடையிலான தனியார் துறை மீது பாரிய பங்களிப்பினை ஏற்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னோடியான வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் வர்த்தக திணைக்களம்  மேலும் தெரிவித்தது. 

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9-11 ஆம் திகதிகளில் குவைத்தில் நடைபெற்ற வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான, குவைத் – இலங்கை கூட்டு அமைச்சர்களின் குழுவின் இரண்டாவது அமர்வின் போது, இரு நாடுகளின் .அமைச்சர்கள் தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு, தங்களுடைய முழுமையானதும் உறுதியானதுமான முடிவுகளை வெளிப்படுத்தினர் என்றும், குவைத் – இலங்கை உறவுகள் எப்பொழுதும் சுமூகமாகவும் பரஸ்பர ஆதரவாகவும் இருந்ததாகவும், உறவை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் தனியார் துறையினரால் முகம்கொடுக்கப்படும் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்வதற்கும் கூட்டு அமைச்சர்களின் குழு ஒரு பயனுள்ள தளமாக இருக்கும் என்றும், குவைத் நாட்டின்  வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் குவைட் காலீட் நாசர் அல்-ருவுடன், தனது வரவேற்பு உரையில் இவ்வாறு தனது கருத்துக்களை தெரிவித்ததாக, வர்த்தக திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தனது ஆரம்ப உரையை வழங்கியதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புரீதியான மற்றும் சுமூகமான உறவை நினைவு கூர்ந்தார். நீர்ப்பாசனம், விவசாயம், கல்வி, மின், வலு மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்காக சலுகை அடிப்படையில் நிதி ஆதரவு குவைத்தினால் இன்று வரை இலங்கைக்கு வழங்கப்படுகிறது. இரு நாடுகளிலும் தங்கள் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, மேற்கொள்ளப்படாத திறனை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் வர்த்தக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.

இலங்கைக்கும், குவைத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். குவைத்துக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 33 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கமாக உள்ளன. அதேபோல குவைத்தின் இறக்குமதிகள் 17 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

குவைத் சந்தைக்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகளாக கருப்பு தேயிலை, சமையல் தயாரிப்பு, உறைந்த தேங்காய், தேங்காய் பால் பவுடர், பழங்கள் மற்றும் காய்கறிகள், பசுமையான தாவரங்கள் மற்றும் பூக்கள் போன்றவை காணப்படுகின்றது. குவைத்தில் இருந்து இலங்கையின் பிரதான இறக்குமதியாக பிளாஸ்டிக் மற்றும் கரிம இரசாயனங்கள், கடதாசி மற்றும் கடதாசி அட்டைகள், கனிம மற்றும் இரசாயன உரங்கள் மற்றும் எத்தனோல் ஆகியன காணப்படுகின்றது. இதற்கிடையில், குவைத்தில் இருந்து இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 4,300 ஆக இருந்தது. தற்போது இலங்கையில் குவைத் முதலீடு இன்றியமையாததாக உள்ளது.

குவைத் – இலங்கை  கூட்டு அமைச்சர்களின் குழு அமர்வின் கலந்துரையாடல்கள்   வர்த்தக, பொருளாதார, நிதி, முதலீடு, தொழில், மனிதவளத்துறை, தொழிற்துறை, சுற்றுலா, விவசாயம் மற்றும் வளர்ச்சி போன்ற பரந்த ஒத்துழைப்பு துறைகளில் கவனம் செலுத்தியது. குவைட் – இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும்  முன்னெடுத்துச் செல்வதற்கும், தனியார் துறையை நெருக்கமாக ஈடுபடுத்தும் பல முன்னெடுப்புகளினூடாகவும் ஒருங்கிணைக்க, தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில் குவைத் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில், ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை எளிதாக்குவதற்கு உடன்பட்டனர் என்றும் வர்த்தக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.

தொழில்நுட்ப பேச்சுவார்த்தையின் போது, இலங்கை சார்பில் வர்த்தக திணைக்களத்தின்   மேலதிக பணிப்பாளர் நாயகம் நிமால் கருணாதிலக்க தலைமைதாங்கினார். அதே நேரத்தில் குவைத் சார்பில், குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி. காலீட் அல் பஃதேல் தலைமைதாங்கினார்.

இலங்கைப் பிரதிநிதிகள் குழு, அமைச்சர் பதியுதீன் தலைமையில் விஜயத்தை மேற்கொண்டது. இவ்விஜயத்தில் குவைத்துக்கான இலங்கை தூதுவர் எச்.ஈ.பி.காண்டீபன் மற்றும் வெளிப்புற வளத்துறை திணைக்களத்தின் சிரேஷட் அதிகாரிகள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் குவைத் தூதரகத்தின் இலங்கையின் அதிகாரிகள். கலந்துகொண்டனர்.

குவைத் நாட்டின்  வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் குவைட் காலீட் நாசர் அல்-ருவுடன் தலைமையில், வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு, தகவல் துறை அமைச்சு, மனிதவள மேம்பாட்டுத்துறை, வேளாண்மை அலுவல்கள் மற்றும் மீன் வளங்கள் பொது அதிகாரசபை, தொழில்துறைக்கான பொது ஆணையம், குவைத் முதலீட்டு அதிகாரசபை, வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் மற்றும் அரபு பொருளாதார அபிவிருத்தி, குவைத் நிதி ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

 

Related Post