Breaking
Wed. Apr 24th, 2024

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் இத்தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் காங்கிரஸ்தான் தடுத்தது” என்ற பிரச்சாரம் தொடராக குறித்த கட்சியினரால் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.

பல முகநூல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டபொழுது “ஆம், சந்தேகமில்லாமல் மக்கள் காங்கிரஸ்தான் அதற்கு உடன்படவில்லை; மட்டுமல்ல, அமைச்சர் பௌசியின் வீட்டில் மார்ச் 13, 16ம் திகதிகளில் மக்கள் காங்கிரஸ் –  முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிற்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த இணைவுக்கு எதிராக முழுமையாக வாதிட்டது; வை எல் எஸ் ஹமீட்தான்; என்பதையும் தெட்டத்தெளிவாகத் தெரிவித்திருந்தேன்.

எனவே, மக்கள் காங்கிரஸ்தான் தடையாக இருந்தது; என்றோ அல்லது வை எல் எஸ் ஹமீட்தான் எதிராக வாதிட்டார்; என்றோ குறித்த கட்சியினர் எழுதி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. நாம் மறுத்திருந்தால் அல்லது முஸ்லிம் காங்கிரஸ்தான் இணைவுக்கு தடையாக இருந்தது; என்று நாம் கூறியிருந்தால் அவ்வாறு எழுதுவதில் நியாயமிருக்கும்.

(அதேநேரம் மட்டக்களப்பில் அவ்வாறான இணைவுக்கு முஸ்லிம் காங்கிரஸ்தான் தடையாக இருந்தது; என்றபோதிலும் அது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ளவுமில்லை)

இங்கு கேள்வி என்னவென்றால் மக்கள் காங்கிரஸ் தடையாக இருந்தது, நியாயமா? இல்லையா? சமூக நலன்கொண்டதா? இல்லையா? என்பதுதான் இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

நியாயமில்லையென்றால், சமூகநோக்கமானதாக இல்லையென்றால் மக்கள் காங்கிரஸ்  விமர்சிக்கப்படவேண்டியதே!

எந்தப் பக்கம் நியாயம் இருக்கின்றது? என்பதை மக்கள் அறிந்துகொள்ள சரியான முறை என்ன? இருதரப்பும் தம்பக்க நியாயங்களை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்வைத்தால், மக்கள் நீதிபதிகளாக எந்தப்பக்கம் நியாயமிருக்கின்றது; என்பதைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

அந்தவகையில், அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவர் என்னுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவர்கள் பக்கம் நியாயமிருந்தால் நிறுவமுடியும். எனவே, பல முகநூல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதற்கான அழைப்பை விடுத்தேன். யாரும் வரவில்லை.

அதேநேரம், வசந்தம் தொலைக்காட்சியில் அவர்களது “ தீர்வு” நிகழ்ச்சிக்கு எதிர்வரும் ( ஜூலை) 17ம் திகதி கலந்துகொள்ள முடியுமா? என என்னை அழைத்தபோது, தேர்தல் காலத்தில் கல்முனையில் இருந்து கொழும்பு வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாயின், அது பிரயோசனமாக இருக்கவேண்டும். இம்மூன்று முன்னாள் எம்.பி க்களுள் ஒருவரை அழையுங்கள்; என்றேன்.

பின்னர் சொன்னார்கள் ‘முயற்சி எடுத்தும் கைகூடவில்லை’ என்று. அதன்பின் கடந்த 22ம் திகதி மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திலும், 23ம் திகதி எனது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் ( இரண்டும் முகநூலில் ஒளிபரப்பப்பட்டது) அதே பகிரங்க அழைப்பை விடுத்தேன்.

அவ்வாறான ஒரு நிகழ்ச்சிக்கு வந்து, அவர்கள் தரப்பில் நியாயமிருந்தால் அவற்றை நிறுவுவதற்குப் பதிலாக, முகநூல்களில் ‘மக்கள் காங்கிரஸ்தான் தடுத்தது’ என்பதில் அர்த்தமில்லை.

இந்நிலையில்தான் இன்று (26) இரவு 9.30 மணிக்கு, தாருஸ்ஸபா நிகழ்ச்சியில் தெளிவான விளக்கத்தை வழங்க முடிவுசெய்தேன்.

இப்போதும் ஒன்றுமில்லை. நாளைய நிகழ்ச்சியில் அம்மூவரில் ஒருவர் கலந்துகொள்ளலாம். அது ஆரோக்கியமானதாக இருக்கும்.

அவ்வாறான ஒரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் தயாரில்லை. எங்களுக்கெதிராக முகநூல்களில் வெற்றுக் குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்; எனும்போது, உண்மைகளை, நியாயங்களை வெளிக்கொணரும் அந்த தார்மீகக்கடைமையின் வெளிப்பாடாகவே இன்று இன்ஷாஅல்லாஹ், இந்த விடயம் தொடர்பாக பேச இருக்கின்றேன்.

எத்தரப்பாயினும் நியாயம் வெல்லட்டும்.

வை.எல்.எஸ்.ஹமீட்-

Related Post