Breaking
Thu. Apr 25th, 2024
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழான திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நியூஸிலாந்து பல்வேறு உதவிகளை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானியர் தூதுவர் ஜோயன்னா கெம்ப்கெர்ஸ்  வடக்கில் மீளக்குடியேறுவோரின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று மாலை (04) அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்தியா, பங்களாதேஸ் நாடுகளின் உயர்ஸ்தானியராகவும் கடமையாற்றும் இவர், நேபால் நாட்டிலும் நியூஸிலாந்துக்கான தூதுவராகவும் பணியாற்றி வருகின்றார்.
”நியூஸிலாந்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் படுகொலைகள் மிகவும் மனவறுத்ததிற்குரியது அந்த சம்பவம் எங்களுக்கு கவலை தருகிறது. இந்த சம்பவம் நடந்தவுடன் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும், சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீது காட்டிய பரிவு எமக்கு ஆறுதல் அளிக்கின்றது. நியூஸிலாந்து பிரதமரின் இந்த உடனடி செயற்பாடுகளையும் அவரது துணிச்சலையும் இலங்கையர்களாகிய நாம் பாராட்டுவதோடு நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.” என்று அமைச்சர் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் நியூஸிலாந்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் முற்காப்பு நடவடிக்கைகளும், விழிப்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாத் உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
திறன் அபிவிருத்தி அமைச்சின் மூலம் இளைஞர்களினதும், யுவதிகளினதும் திறன்களை வளர்ப்பதற்கும் அதன் மூலம் தொழில் இல்லாத பிரச்சினைகளை குறைப்பதற்கும் நியூஸிலாந்து உதவ வேண்டும் என அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உயர்ஸ்தானிகர் நியூஸிலாந்து இலங்கைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
-ஊடகப்பிரிவு-

Related Post