Breaking
Fri. Apr 19th, 2024

சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எங்களைச் சுற்றி காவியுடை தரித்தவர்கள் வன்முறைகளைத் தூண்டுகின்றவர்கள், முஸ்லிம்களைக் கொன்றொழிக்க வேண்டுமென்று சொல்கின்றவர்கள். முஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றார்கள் என அநியாயமாக பழி சுமத்துகிறவர்கள் அல்லது முஸ்லிம்கள் எதிர்காலத்திலே இந்நாட்டைப் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தை அநியாயமாகத் தோற்றுவிக்கின்றவர்கள் எல்லோரையும் தோற்கடிக்கின்ற பொறுப்பு முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது.

நாங்கள் எல்லோரும் எங்களுடைய ஈமானையும் எங்களுடைய பர்தாக்களையும், பள்ளிவாயல்களையும் சதிகார பௌத்த துறவிகளிடத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது. எனவே விரைவில் நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எல்லோரும் வீதிக்கு வந்தேயாக வேண்டியதொரு தேவைப்பாடு ஜனாதிபதித் தேர்தலிலே இருக்குமென நான் நினைக்கின்றேன்.

இதை இப்பிரதேசத்தில் இருக்கின்ற யுவதிகள், பெரியவர்கள், வயது போனவர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பிச்சை எடுக்கின்றவர்கள் கூட இந்தப் பணியை செய்தே ஆக வேண்டும். அப்படிச் செய்தால் தான் இந்தச் சமூகத்தின் வல்லமை தெரிய வரும்.

இந்த முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளி விட்டு ஒரு ஜனாதிபதி வர முடியாதென்கின்ற செய்தியை சிறுபான்மைச் சமூகமான தமிழ் சமூகத்தையும், கிறிஸ்தவ சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது அது போன்று இப்பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது.

இதிலே மிகவும் தெளிவாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள். இதற்குள்ளே நீங்கள் வேறு விதமான கதைகளை பேசிக் கொண்டிருந்தால், வேறு கட்சி ரீதியான குரோதங்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அல்லது நாங்கள் அப்படி நடப்போம். இப்படி நடப்போமென்று பேசிக்கொண்டிருந்தால் ஒட்டு மொத்தமாக தோற்கடிக்கப் போவது இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

அதனோடு இணைந்து ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகமும் இந்நாட்டிலே மதிக்கப்படாது, தூக்கி எறியப்படுகின்ற அல்லது துரத்தப்படுகின்றவொரு சமூகமாக நாங்கள் மாற்றமடைந்து விடுவோம். இறைவன் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களை முஸ்லிம் அரசியல் தலைவர்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பணியில் நாங்கள் உங்களை அழைப்பு விடுக்கின்ற போது நீங்களும் எங்களோடு சேர்ந்து தோளோடு தோள் சேர்த்து உழைக்க வேண்டும்.

பள்ளிவாசல் தலைவர்கள், பள்ளிவாயல்கள், நிறுவனங்கள் என்று இந்தப் பிரதேசத்தில் என்னென்ன அமைப்புகளெல்லாம் இருக்கின்றதோ அந்த அமைப்புகளெல்லாம் வீதியிலே இறங்கிப் பணியாற்ற வேண்டிய கால கட்டத்திலிருக்கின்றோம்.

முஸ்லிம்களுக்கு தற்போதிருக்கின்ற பயங்கரவாதம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் வரை தொடர்ந்தேர்ச்சியாக இருக்கும். நாளை முடிந்து விடும் மறுநாள் முடிந்து விடுமென்று நீங்கள் யாரும் யோசிக்காதீர்கள் எப்போது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அவர்கள் எதிர்பார்க்கின்ற ஜனாதிபதியைப் பெற்றுக் கொள்ளலாமென்று அவர்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றார்களோ அல்லது கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்களோ அது வரைக்கும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதானிருக்கும் என்பதையும் நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்.

எங்கோவொரு மூலையிலே பௌத்த மதகுரு கத்திக்கொண்டு தான் இருப்பார் அல்லது எங்கோவொரு சந்தியிலே பௌத்த மதத்தைச் சேர்ந்த பேரினவாத சமூகத்தைத் தூண்டுகின்ற ஒரு அரசியல்வாதி முஸ்லிம்களுக்கெதிராகப் பேசிக் கொண்டு தான் இருப்பார்.

அப்படி இல்லையென்றால், எங்கேயோ ஒரு அரசியல்வாதி ரிஷாத் பதியுதீனுக்கெதிராக ஊடகங்களிலோ அல்லது எங்கேயாவது ஒரு சந்தியிலிருந்து கொண்டு அவரைக் கைது செய்ய வேண்டும். அவரது குரல்களை நசுக்க வேண்டுமென்ற காரணத்திற்காக அப்பணியை அவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டார குழு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பொது அமைப்புக்களினால் பொன்னடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் 144 பயனாளிகளுக்கு 54 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post