Breaking
Fri. Apr 26th, 2024
தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சின் தூரநோக்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் உயர்மட்டக் கூட்டம் நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான கருணாரட்டன  பரணவிதான மற்றும் புத்திக  பத்திரண    அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க மற்றும் அமைச்சின் கீழ்வரும் 12 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அமைச்சின் எதிர்கால திட்டங்கள் மற்றும் பணியிலக்குகள் தொடர்பில் அமைச்சர் எடுத்துக் கூறியதுடன் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி முறையாக வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாட் பதியுதீன், ‘பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாத இளைஞர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பது மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இவ்வாறான இளைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை முறையாக வழங்குவதும்; தமது சொந்த வாழ்வாதாரத்தை பெறக்கூடியவர்களாகவும் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியதாகவும் அவர்களை உருவாக்குதும் இந்நாட்டுக்கு மிக முக்கியமான விடயமாகும். எனவே அதன் தாற்பரியத்தை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்’ என்றார்.
அமைச்சின் கீழுள்ள மூன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய தொழிற்பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம், இலங்கை அச்சிடல் நிறுவகம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, வாழ்க்கைதொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம், தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம்,  தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலை, இலங்கை தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களம், இலங்கை கடல்சார் பல்கலைக்கழகம், திறன்கள் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், திறன்கள் விருத்தி நிதியம் ஆகிய நிறுவனங்களின் உயரதிகாரிகள் தங்களது நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றி இதன்போது சுருக்கமாக விபரித்தனர்.
8 Attachments

Related Post