இந்து ,பெளத்த மதங்களை பாதுகாப்பதற்கான பெளத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உதயமானது. பொதுபலசேனாவும் அகில இலங்கை இந்து சம்மேளனமும் இணைந்து இவ்வமைப்பை உருவாக்கியுள்ளன.
இதற்கான உடன்பாடு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண் காந்துக்குமிடையே பௌத்த,இந்து ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மத மாற்றத்தை எதிர்த்து தமிழ் இந்துக்கள் எழுச்சி பெற வேண்டிய காலம் வந்து விட்டது.
எனவே, இனியும் பொறுமை காக்காது இந்துக்களும் பெளத்தர்களும் ஒன்றுபட வேண்டும். இன்று அதற்கான பலமான ஆரம்பத்தை எடுத்து வைத்துள்ளோம்.அதனை மேலும் பலப்படுத்தி மதமாற்றத்திலிருந்து அடிப்படைவாத சக்திகளிடமிருந்து எமது மதங்களையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்வோம்.பெளத்தர்களோ இந்துக்களோ தமது மதத்திற்கு முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களைவோ மாற்றவில்லை. மாறாக அடிப்படைவாத முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமே இந்துக்களையும் பெளத்தர்களையும் மதமாற்றம் செய்கின்றனர்.
வடக்கு கிழக்கில் மட்டுல்ல தெற்கு மேல் மாகாணம் என அனைத்து பிரதேசங்களிலும் எமது மக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை எதிர்த்து தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றனர்.ஆனால், யாழ்ப்பாணத்தில் காளான்களைப்போன்று உருவெடுக்கும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் இவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா.
அது மட்டுமா தமிழ் கிராமங்கள் பூண்டோடு முஸ்லிம் மயமாக்கப்படுகின்றது. நாடு முழுவதும் அடிப்படைவாத கிறிஸ்தவ சபைகள் தலைதூக்கியுள்ளன. மக்களின் வறுமையை போக்கி அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அமைப்புக்களால் அதனை செய்ய முடியாது.
கல்முனை அக்கரைப்பற்று தமிழ் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக கண்டறிய வருமாறு எமக்கு அழைப்பு விடுத்துள்ளனர். விரைவில் அங்கு செல்வோம்.
அது மட்டுமல்லாது பெளத்த இந்து மதங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக வடக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளோம். யுத்தத்தால் சிதைந்து போன தமிழ் மக்களின் உள்ளங்களை ஆசுவாசப்படுத்தி மீண்டும் எமக்கிடையேயான நட்புறவை பலப்படுத்துவோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் மற்றும் இந்து சம்மேளனத்தின் செயலாளர் எம். முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.