Breaking
Thu. Apr 18th, 2024
பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்டவேளை, அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் விரைந்தார்.
அந்த நேரத்தில் குறித்த பகுதியில் எல்லையிடும் அதிகாரிகள் லாகுகல மற்றும் பொத்துவிலின் எல்லைப்படுத்தலுக்கான 2006 ஆம் ஆண்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி எல்லைகளை அமைக்காமல், அதற்கு முரணான வகையில் எல்லைகளை அமைத்துக்கொண்டிருந்துடன், எந்தப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவில் எல்லைகளை அமைக்கின்றார்கள் என்பதனையும் கூட அறியாத நிலையில் இருப்பதையும் கண்டறிந்த முஷாரப் எம்.பி, அங்கு எல்லையிடுவதில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு லாகுகல மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி, அதனூடாக எடுக்கப்படும் தீர்மானத்தின் பிரகாரம் அங்கு எல்லையிடும் பணியினை தொடங்குமாறு குறித்த வன இலாகா அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியதோடு, எல்லையிடும் பணிகளை தொடரவேண்டாம் எனவும் 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளுடன் சுமூகமாக பேசி, தீர்மானம் ஒன்றை எடுத்து அனைவரும் சுமுகமாக களைந்து சென்றனர்.
ஆனால், அதன் பின்னர் ஒரு சில நபர்கள் குறித்த விடயத்தினை சிங்கள ஊடகங்களிலும் செய்தித்தாள்களினூடாகவும், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபின் மீது வீண் பழி சுமத்தி, அவரை தவறான முறையில் சித்தரித்து, சிங்கள மக்களிடையில் ஓர் இனவாத செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
இந் நிலையில் நேற்று (16.11.2020) வன இலாகா அதிகாரிகள், விவசாயக் குழுவினர்கள், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, செங்காமம் மற்றும் கோமாரி இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆகியோர், பாராளுமன்ற உறுப்பினர்முஷாரபின் தலைமையில் குறித்த எல்லையிடும் பிரச்சினைகளுக்கு தீர்மானம் ஒன்றை பெறுவதற்காக, பொத்துவில் பிரதேச செயலகத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
இதன்போது, சமூகமளித்த அனைத்து அதிகாரிகளின் முன்னிலையிலும், இலங்கை நில அளவை திணைக்களத்தினால் (Land survey Department) வெளியிடப்பட்ட இரண்டு நிலவரைபடங்கள முஷாரப் எம்.பி சமர்ப்பித்திருந்ததோடு, பழைய வரைபடத்தில் விடப்பட்டிருந்த ஒரு தவறினால்தான் வன இலாகாவினரால் தவறான முறையில் ஆமவட்டுவான் பிரதேசத்தில் எல்லைக்கற்கள் இடப்பட்டது என்பதை தெளிவுபடுத்தி, புதிய நிலவரைப்படத்தின் பிரகாரம் எல்லைக்கற்கள் இடுமாறும், அவ்வாறு எல்லை இடுவதன் மூலம் ஆமவட்டுவான் வயல் பிரதேசத்திலிருந்து விவசாயிகளுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட குறித்த எல்லைக்குள் உள்வாங்கப்படமாட்டாது என்றும் வன இலாகா அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
மேலும், அவர்களினால் பயன்படுத்தப்பட்ட Hand GPS கருவியினால் வரையப்படுகின்ற வரைபடங்கள் துல்லியமான முறையில் எல்லைகளை அடையாளப்படுத்த முடியாததினையும் வன இலாகா அதிகாரிகள் புரிந்துகொண்டதிற்கிணங்க, அரசாங்கத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், ஆமவட்டுவான் பிரதேசத்தில் எல்லையிடும் பணிகளை தொடர்வதற்கு முஷாரப் எம்.பி யின் தெளிவூட்டலுக்கு இணங்க, எதிர்வரும் புதன்கிழமை 18.11.2020 எல்லையிடும் பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, குறித்த விடயம் சம்பந்தமாக, இதற்கு முன்னதாக சிங்கள இணைய ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் பிரசுரிக்கப்பட்ட செய்திகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபபின் உண்மை நிலைப்பாட்டுக்குமிடையில் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளும், லாகுகல பிரதேச செயலாளரும் புரிந்துகொண்டதோடு கூட்டம் நிறைவடைந்தது.

Related Post