Breaking
Wed. Apr 24th, 2024
வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு , சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால், இன்று(08) 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்த வழக்கை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதென உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
இந்த வழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் 04வது பிரதிவாதியாக இருக்கின்றார்.
சூழலியல் சார்ந்த இயக்கங்களாகான environmental foundation (guarantee) limited , Wildlife and nature protection society srilanka ஆகியோர் மனுதாரர்களாக இருக்கும் இந்த வில்பத்து பாதை வழக்கில், இடையீட்டு மனு தாரகளாக சட்டத்தரணி பீர் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் உட்பட அந்த பிரதேச பொதுமக்கள் சிலர் இருக்கின்றனர்.  04வது பிரதிவாதியான ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.யூ. அலி சப்ரி இந்த வழக்கில்  தொடர்ந்தும் ஆஜராகி வருகிறார்.
இடையீட்டு மனுதார்கள் சார்பில் ஜனாதிபதி  சட்டத்தரணி வெலியமுன ஆஜராகி வருகிறார்.
ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி,  இணக்கம் காணப்பட்டவாறு பொதுமக்கள் குறிப்பிட்ட பாதையை பய்ன்படுத்தக்கூடிய வகையிலும், வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாகவும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி இந்த பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இவ் வருடம் மார்ச் 25ஆம் திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நிறைவு செய்து முடிவுக்கு கொண்டுவருவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் மனுதாரர்கள் அடுத்தடுத்து இடம்பெற்ற வழக்குகளில் இணக்கம் வெளியிட மறுப்பு வெளியிட்ட காரணத்தினால், குறிப்பாக இந்த பாதையில் பொதுமக்கள் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வாகனம் ஆகியவற்றில் கூட போக்குவரத்து செய்வதற்கு மறுப்பை வெளியிட்டதனாலும் உச்ச நீதிமன்றத்தில் இணக்கம் காணப்படவில்லை.  அதுமாத்திரமின்றி வனஜீவராசிகள் திணைக்களமும் இந்த பாதையை திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையிலையே, இம்மாதம் ஜூலை 1ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விவாதத்திற்கான திகதி தொடர்பில் இன்று முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டு இன்று (08) ஆம் திகதி வழக்கு விசாரணைக்கான திகதியும் அறிவிக்கப்பட்டது.
04வது பிரதிவாதியான ரிஷாத் பதியுதீன் சார்பில் இன்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்றைய தினமும் உச்சமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
வில்பத்து பாதையை மீள திறக்க வேண்டும் என்பதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பல்வேறு நடவடிக்கைகளையும், அர்ப்பணிப்பான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
இதேவேளை,  ஏற்கனவே வனஜீவராசிகளுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் காமினி ஜெயவிகர பெரராவை ரிஷாத் பதியுதீன் பல தடவை கொழும்பில் சந்தித்து இந்த பாதை மூடப்பட்டிருப்பதால் அந்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து எடுத்துரைத்திருந்தமையையும், பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இந்த பாதையின் முக்கியத்துவம் தொடர்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  அதுமாத்திரமன்றி  விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை அந்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று உண்மை நிலைகளை தெளிவு படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும்,  இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதானாலயே அரசியல் ரீதியான முன்னெடுப்படுப்புகளில் தாமதம் நிலவி வருவதை இங்கு நினைவு படுத்த வேண்டும். எனினும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை மீண்டும் சந்தித்து இந்த பாதையை மீண்டும் திறப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கான முயற்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post