Breaking
Wed. Apr 24th, 2024
வெள்ளைவேன் கலாசாரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பயங்கரமான சூழ்நிலைக்குள் தள்ளிய கோத்தாபாய,மஹிந்த ராஜபக்சக்களுக்கு மீண்டும் அரசியல் அதிகாரம் தேவையா? என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
திருகோணமலை பகுதியில் இன்று (03) ஞாயிற்றுக் கிழமை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெற்ற பல்வேறு மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் முப்பது வருட கால யுத்தத்தின் பின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஊடாக கோத்தாபாய போன்றோர்களே சிறுபான்மை சமூகத்தை நாசமாக்க முனைந்தார்கள் இவ்வாறானவர்களே மீண்டும் ஜனாதிபதியாக வர முயற்சிக்கிறார்கள் இவர்களை நாங்கள் நிராகரித்து அனைத்து சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற அன்னச் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் அன்னத்திற்கு வாக்களிப்பதனால்தான் அங்கீகாரமுடைய நாட்டு மக்களின் நிலையை உணர்ந்த ஜனாதிபதியை காண முடியும்.
ஜனநாயக ரீதியாக சிந்தித்து அச்சமின்றி வாக்களிப்பதனால் இரவிலும் பகலிலும் நிம்மதியாக தூங்க முடியும் கோட்டா ஜனாதிபதியாகினால் நிம்மதியாக தூங்க முடியாது.
இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்கின்ற நிலைதான் உள்ளது.
சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் சஜீத் பிரேமதாசவை உணர்ந்து கொண்டுள்ளார்கள் அப்பாவி மக்களின் உணர்வுகளையும் மலையக சமூகத்தின் உணர்வுகளை உணர்ந்த தலைவராக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் உள்ளார்.
பல்வேறு அபிவிருத்திகள் மட்டுமல்ல இந்த நாட்டில் நிலையான சமாதானம்,நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தூர நோக்குடன் வாழ்வதற்கு நாம் நாம் சார்ந்த ஏனைய சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளும் முடிவெடுத்துள்ளார்கள். கல்வி,சுகாதாரம்,போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகள் அபிவிருத்தியடையும் இதனால் பாமர மக்களின் வாழ்வாதாரமும் உயர்வடையும் .
இனமத வேறுபாடின்றி அமைச்சராக இருந்த போதும் கூட அதிகளவான வீட்டுத் திட்டங்களை உருவாக்கிய பெருமை சஜீதையே சாரும் தொடர்ச்சியான பணிகள் அரசியல் மயமான நல்லாட்சிக்கான பயணமாக இணைய அனைவரும் இத்தருணத்தில் ஒன்றினைய வேண்டும் என்றார்.

Related Post