Breaking
Thu. Apr 18th, 2024
ஜனாதிபதியினால் முசலி பிரதேசத்தில்  உள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை   வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்பிலும்,பாதிக்கப்பட்ட முசலி பிரதேச மக்களின் காணி அபகரிப்பிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நேற்று வியாழக்கிழமை முசலி பிரதேசச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  கலந்துரையாடல் வன்னியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்காது ஒரு சாராரினால் தன்னிச்சையாக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
ஜனாதிபதியினால் மறிச்சிக்கட்டி கிராமம் தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை (27) முசலி பிரதேசச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாகவும், குறித்த கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி செயலகத்தின் மேலதிகச் செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகள், வடமாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை அழைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் குறித்த கலந்துரையாடலுக்கு வன்னி மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையோ,அல்லது வடமாகாணசபை உறுப்பினர்களையோ அழைக்கவில்லை.
ஒரு தலைப்பட்சமாக சிலரின் சுய நலத்திற்காக இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலுக்கு மறிச்சிக்கட்டி, பாழைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம்,கஜீவத்த போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த கலந்துரையாடலுக்குச் சென்ற போது குறித்த மக்கள் வெளியேற்றப்பட்டதோடு,குறித்த கலந்துரையாடல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையில் இடம் பெறும் ஓர் முக்கிய கலந்துரையாடல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை முசலி பிரதேசச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற சமூர்த்தி அலுவலகர் ஒருவர் தன்னிச்சையாக செயற்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மறியாதையின்றி கதைத்துள்ளார்.
குறித்த சமூர்த்தி அலுவலகர் அவ்வாறு நடந்து கொள்ளுவதற்கான   அதிகாரத்தை பிரதேசச் செயலாளர் வழங்கினாரா?அல்லது அங்கு வந்த அரசியல் வாதிகள் வழங்கினார்களா? என்பது தெரியாது.
குறித்த சமூர்த்தி அலுவலகரின் நடவடிக்கைக்கு எதிராக முசலி பிரதேசச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 33 நாற்களாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி கிராமத்தில் நில மீட்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஒருவர் இன்று தான் (நேற்று) வந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறி முசலி பிரதேசச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
குறித்த கலந்துரையாடலில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இடம் பெற்றது என்றால் அதற்கான காரணம் தெரியாத நிலை உள்ளது.தமது விருப்பத்திற்கு மாறாக இவ்வாறானதொரு கலந்துரையாடலில் இடம் பெற்றுள்ளதாக முசலி பிரதேச மக்கள் எங்களிடம் முறையிட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *