இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை நிருவாகத்துடன் வைத்தியசாலை பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
இப்போது முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சனை தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதாகும். இப்பிரச்சனையை இன்று நாட்டில் துணிந்து பேசுகின்ற ஒரு முஸ்லிம் தலைவர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஸாட் பதியூதின் ஆகும்.
ஜனாதிபதி, பிரதமர், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அமைச்சர்கள், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மதத்தை துவேசம் காட்டும் மத வெறியர்கள் கூட யாருடா இவ்வாறு பேசுகின்றார் என்று நினைத்து பார்க்கின்றார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வைத்து கொண்டு தான் முஸ்லிம்களின் வியர்வை மற்றும் இரத்தத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது முஸ்லிம்களுக்கு அரசியலில் இருக்கின்ற பெரிய பிரச்சனை உரிமையும் தேவை, அபிவிருத்தியும் தேவை.
தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைக்கு அரசாங்கத்தோடும், அமைச்சர்களோடும் சண்டை பிடிக்க வேண்டி உள்ளது. இது மற்றைய சமூகத் தலைவர்களுக்கு இல்லை. இது எமக்கு ஒரு துரதிஸ்டவசமான நிலைமை.
பெரும்பான்மை சமூகத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்கின்ற சவாலிலே தான் நாங்கள் இருக்கின்றோம். வடக்கு கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இதிலே தெளிவு இல்லை.
அரசியல் தலைமைகளிடம் நாங்கள் மாத்திரம் சண்டை போடக் கூடாது எதிர்காலத்தில் நீங்களும் அதில் பங்களிப்புச் செலுத்த வேண்டும். இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதற்காக எதிர்காலத்தில் நாம் எல்லோரும் உழைக்க வேண்டும், பிரார்த்திக்க வேண்டும்.
எங்கு பிழை விட்டுள்ளோம் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். அந்த பிழைய மீண்டும் நடக்காதவாறு அவர்களின் உள்ளங்களை வெல்லுகின்ற ஒரு வேலைத் திட்டத்தை செய்யத் தவறுவோம் என்று சொன்னால் எங்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சனை இருக்கத் தான் செய்யும் என்றார்.