முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு அடித்தளமாக அமையட்டும் இவ் ஈகைத்திருநாள்.
அளவற்ற அருளாளனும், அன்பில் நிகரற்றவனுமாகிய வல்லநாயன் அல்லாஹ்வின் திருப்பெயரை துதித்து, புனித ரமழான் முடிவில், மலரும் இவ் ஈகைத்திருநாளை மகிழ்வுடன் வரவேற்று, மனித அவலங்கள் தீர்ந்திடபிரார்தித்து, மகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய், மனதாற ஆர்ப்பரித்து மகிழ்ந்திட என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் முஸ்லிம் நெஞ்சங்களுக்கு.
முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழிப்பதற்க்கு சர்வதேச பயங்கரவாதம் முனைப்புக்காட்டி அதில் வெற்றியும் கண்டு கொண்டிருக்கின்றது. இதுவே இன்றைய அரபுலக நிலவரம்.
அதேநேரம் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் மீதான காழ்ப்புணர்ச்சியை சில பேரினவாத சக்திகள் பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு முஸ்லிம்களின் இருப்பை இந்நாட்டில் கேள்விக்குறியாக்குவதே பேரினவாதிகளின் நோக்கமாகும். இந்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழவே அனைத்து இன மக்களும் ஆசைப்படுகின்றனர், ஆனால் இன ஒற்றுமையையும், சுபீட்சத்தையும் விரும்பாத சிலர் இனங்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்த முனைகின்றனர்.
இவ் இனவாதிகளின் செயற்பாடுகள் நிரந்தரமானதல்ல, இனவிரோத செயற்பாடுகள் முறியடிக்கப்பட்டு இன ஐக்கியத்தோடும், சகோதரத்துவத்தோடும் அனைத்து இன மக்களும் இந்நாட்டில் இறைமையுடனும் வாழ இப்புனித திருநாளில் பிராத்திக்கின்றேன்.
வல்லநாயன் அல்லாஹ்வின் சொல்லுக்கு கட்டுப்பாட்டு, எம்பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை அச்சொற்றாக பின்பற்றி, நாமெல்லாம் முஸ்லிம்கள் என்ற ஒரே உணர்வில் ஒற்றுமைப்பட்டு வாழ்வதுதான் எம்முன்னால் உள்ள தடைகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான சதிகள் யாவையும் உடைத்தெறிய வழிசெய்யும்.
மாதம் ஒன்று நோன்பிருந்து, நல்லமல்களை தினம் செய்து, இறை நினைவில் ஒவ்வொரு நொடியும் சுவாசித்து, ஈமானை நெஞ்சில் விதைத்து, புனிதமாய் வாழ்ந்த ரமழான் மாதம் எம்மைவிட்டு விடைபெற்றாலும், ரமழானின் பயிற்சிகளை கைவிடாது இனியும் வாழ்தல் தான் ஒவ்வொரு தனி மனிதனையும், எம் சமூகத்தையும் வெற்றிபெறச்செய்யும். அவ்வாறான இறைநினைவுடனான வாழ்வை வேண்டியும், அல்லாஹிவின் பாதுகாப்பையும், அருளையும் வேண்டியும் பிராத்தித்தவனாக மீண்டும் ஒருமுறை ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்