பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட்டங்களை நடாத்துகின்றார் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விரிவாக ஆராயப்பட வேண்டும் பிரதேச சபை செயலாளர்கள் இல்லாமல் எவ்வாறு ஆராய்வது அதன் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் முதலமைச்சர் கூட்டங்களை நடாத்துவதை தவிர்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்ப – செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (10) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதித்தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், திணைக்கள தலைவர்கள், அரச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 39 ஆசிரியர்கள் வேறு வலங்களுக்கு இடமாற்றப்பட்ட போதும் பதிலீடாக 6 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள் என அவ் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் குறிப்பிட்டார்.
கல்குடா கல்வி வலயத்தில்; 60 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ளர்கள் 16 பேர் மாத்திரம் பதிலீடு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே கல்குடா கல்வி வலயத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதி மற்றும் பதிலீடு இன்றி ஆசிரியர்கள் இடமாற்றப்படக் கூடாது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதும் ஆசிரியர்கள் இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்
இங்கு பதிலளித்த பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எட்டப்படும் தீர்மானங்களில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என்றார்.
அறநெறி வகுப்புகள் நடைபெறும் நேரங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள் நடைபெறக்கூடா என ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையிலும் அதனை மீறி வகுப்புகள் நடைபெறுகின்றன. மட்டக்களப்பு நகரில் வகுப்புகள் நடைபெற்றால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது ஆனால் அங்கு ஒன்றும் நடைபெறுவதில்லை என த பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குற்றம் சுமத்தினார்.
எமது மக்கள் மத்தியில் மத ரீதியான உணர்வு குறைந்து கொண்டு செல்கிறது இது ஆராக்கியமான விடயம் அல்ல ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புகள் நடைபெறுவதன் காரணமாக பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.