Breaking
Sat. Apr 20th, 2024
அன்புள்ள சோதரனே ரிசாத் பதியுதீன்….அஸ்ஸலாமு அலைக்கும்!

குலத்தின் கோமகனாய் ,வம்சத்தின் முதல் மகனாய், தங்கள் வாழ்வைச் செழித்தோங்கச் செய்யும் தலைமகனாய் நீ பிறந்த போது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி ஆனந்தப்பட்டவர்கள் உன் பெற்றோர். உனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் உள்ளம் பூரித்துக் கிடந்தவர்கள் அவர்கள்.
பாலப்பருவம் அடைந்த போது பள்ளிக்கூடம் சென்றாய். தவறுகள் நீ செய்து ஆசிரியர்கள் கண்டதில்லை. நீ பொய் பேசிச் சக மாணவர்கள் கேட்டதில்லை. கற்பிக்கும் ஆசிரியருக்கே கை நீட்டிய ‘மக்குபூல்களின்’ மத்தியில் நீ ஆசிரியர்களை மதிக்கின்ற நன்மாணாக்கனாகவும் ஒன்றாய்ப் படிக்கின்ற மாணவர்களை நேசிக்கின்ற அன்பானவனாகவுமே  இருந்தாய். உயர்தரம் படிக்க இன்னொரு பாடசாலை போன போதும் உன் உயர்ந்த குணத்தினால் அனைவரையும் கவர்ந்தாய்.
அந்தச் சின்ன  வயதிலேயே கஷ்டங்களோடு போராடுபவர்களைக் கண்டால் நீ கண்கள் கலங்கிடுவாய். ஏழைகளின் மீது இரக்கம் காட்டுவாய். பணத்தால் உதவ முடியாத நிலையிலிருந்தாலும் உனது உடலால் முடிந்தளவு உதவிகள் செய்திடுவாய்.
பொல்லாப் புலிகளின் முற்றுகைக்குள் முடங்கிப் பஞ்சத்தினாலும் பட்டினியாலும் உனது மாவட்ட மக்கள் பரிதவித்த போது உயிரைத் துச்சமென நினைத்து,அலைகடல் தாண்டித் தலைநகர் வந்து உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டு ஓடிப் போய் வழங்கியவன் நீ. அந்த முயற்சியில் உன்னோடு இருந்த உனது மாமாவையும் கடலிடம் பறி கொடுத்துத் துடித்தவன் நீ. ஆயினும் நீ கலங்கியதில்லை. மக்களுக்கான உனது சேவைகளை மகிழ்வுடன், மனமுவந்து செய்திட நீ தயங்கியதில்லை.
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்புக்கு இரையாகிப் போன இலட்சக் கணக்கானோரில் நீயும் ஒருவன். ஆனாலும், உனது விடா முயற்சியினால் கல்வியைத் தொடர்ந்தாய். கல்வியைத் தொடரும் காலத்திலும் மற்றவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உதவிகள் செய்து கொண்டுதானிருந்தாய். பின்னர் இறைவன் உதவியால் இன்ஜினீயரும் ஆனாய்.
அரசியலுக்குள் நீ பிரவேசிக்க முன்னரே படித்த பல இளைஞர்களுக்கு வேலை பெற்றுத் தந்தாய். இன்னும்  பல ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றினாய். உனது உயரிய குணங்களையும் சேவைகளையும் கண்டுதான் ஏழையாக நீ இருந்த போதிலும் மக்கள் தாமே முன்வந்து உன்னைத் தமது மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதியாக்கினர்.
நீ பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதி அமைச்சராகி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருமானாய். இவையெல்லாம்  வெறும் தற்செயல் நிகழ்வுகளல்ல. அல்லாஹ்வின் நாட்டமும் மக்கள் உன் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் அளவு கடந்த பாசமும்தான் உனது இமாலய உயர்வுக்குப் பிரதான காரணம்.
இன்று ஒரு கட்சியின் தேசிய தலைவன் நீ . உனக்காக உயிரையும் கொடுப்பதற்குத் தயாராகவுள்ள பல்லாயிரக் கணக்கான இளைஞர் படையின் பாசத்துக்குரிய தளபதி நீ . உனக்காக-உனது வெற்றிகளுக்காக நோன்பு நோற்று துஆ செய்கின்ற இலட்சக் கணக்கான தாய்மார்களின், தந்தையரின் நேசத்துக்குரிய தவமகன் நீ. உனக்காக எழுதுகின்ற, பேசுகின்ற எண்ணற்றோரின் இனிய சகோதரன் நீ.
எவ்வளவுதான் உயர்ந்து மக்களின் மனங்களில் நிறைந்துவிட்ட போதிலும் நீ ஒரு போதும் மமதை கொண்டதில்லை. அதிகாரமிக்க பதவியில் நீ அமர்ந்திருக்கும் போதும் ஒருநாளும் அகங்காரம் கொண்டதில்லை. மதுவும், மாதுவுமாய்ச் சில தலைவர்களெனப்படும்  தறுதலைகள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட போதும் நீ இஸ்லாத்தின் பாதையிலிருந்து இம்மியளவும் பிசகவில்லை.
நீ சமூகத்திற்காகச் சிந்திக்கின்றாய். சமூகத்தின் உயர்வுக்காகச் சதா  உழைக்கின்றாய். சமூகத்தின்  பாதுகாப்புக்காக இரவு பகலாகப் பாடுபடுகின்றாய். ஆனாலும், உனக்குக் கிடைப்பதும், கிடைத்ததும் என்ன சகோதரா…?
ஒருபுறம் சிங்களப் பேரினவாதம் உன்மீதும் உனது நேர்மையின் மீதும் சீறிச் சினந்து உன்னை ஒழிக்கப் பாடுபடுகிறது. இன்னொரு புறம் தமிழ் இனவாதம் உனது  வளர்ச்சி கண்டு பொங்கிக் கனன்றெழுந்து உன்னை அழிக்கத் துடிக்கிறது. வேறொரு புறத்தில் உனது தலைமைத்துவ எழுச்சியையும் அயராது நாற்புறமும் விரைந்து விரைந்து நீ செய்யும் சேவைகளையும் கண்டு பொறாமையும் அச்சமும் கொண்டிருக்கும் நமது சமூகத்தின் அரசியற் காழ்ப்புணர்வாளர்கள் உன் மீது அபாண்டமான பொய்களையும் புளுகுகளையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் சோதரா…இவையத்தனையையும் தாங்கிக் கொண்டு நீ அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியவனாக அனைவருக்கும் உனது மகத்தான சேவைகளை மகிழ்ச்சியோடு செய்து கொண்டிருக்கிறாய்.
உன்னால் வளம் பெற்றவர்கள் ஆயிரம்; வாழ்க்கை பெற்றவர்கள் பல்லாயிரம். உன்னால் தொழில் பெற்றவர்கள் ஆயிரம்; துயர் துடைக்கப்பட்டவர்கள் பல்லாயிரம். உன்னால் கல்வி கற்றோர் ஆயிரம்; கண்ணீரிலிருந்து வெளியேறியோர் பல்லாயிரம். உன்னால் வீதிகள் பெற்றோர் ஆயிரம்;  வீடுகள் பெற்றோர் பல்லாயிரம்.
சமூகத்திற்கு ஓர் ஆபத்தென்றால் அதனைக் களைய முதலில் நிற்பவன் நீ. சமூகத்திற்கு ஓர் இழுக்கென்றால் அதனைத் தடுக்க முதலில் நிற்பவன் நீ!
கேளிக்கை விடுதிகளில் குடியும் விபச்சாரமுமாக இரவைக் கழித்துவிட்டுப் பகலில் தூங்கி கொண்டிருந்த பல தலைமைகளைத் தட்டியெழுப்பி ஓட  வைத்திருப்பவன் நீ. சமூகம் முகாரி இராகம் பாடிக் கொண்டிருக்கையில் கள்ளப் பெண்டிருடன் கட்டில்களில் கல்யாணி இராகம் பாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் உன்னைப் பார்த்த பின்னர்தான் ‘வுளூ’  செய்யவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். உனது வீராவேசமான உயர்வும் உன்னதமும் பழைய தலைவர்களையெல்லாம் ஆட்டம் காணச் செய்தமையினால், இன்று அவர்கள் உன்னைக் காப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உன்னிலிருந்து அவர்கள் உணர்ச்சி பெறவும் தொடங்கியிருக்கிறார்கள்.
மது, மாது, இறைநம்பிக்கை, சமூக உணர்வு, சேவைகள் என எந்த விதத்திலும் உன்னில் குறை காண்பதற்கு எதுவுமேயில்லாமற் போனதனால்தான் அவர்கள் ‘ஊழல்’ என்ற பொய்யான ஆயுதத்தைத் தமது கையில் எடுத்திருக்கின்றார்கள். அடிப்படையும்  இல்லாமல், ஆதாரங்களும் இல்லாமல் தமது மனம் போன போக்கில் உன்னிற் பழி சுமத்தித் தமது கறைபடிந்த இதயங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை; எவர் எத்தனை வீண் பழிகளைச் சுமத்தினாலும் கவலையில்லை. உனது பயணம் நேர்மையானது. உனது இலக்கு புனிதமானது. உனது சிந்தனை சத்தியமானது. இவை அனைத்துமே நமது  சமூகத்திற்கு அவசியமானது. ஆதலால் சோதரா…கலங்காதே… துவளாதே… சோர்வடையாதே…சேவை வெறி கொண்ட சிங்கமாய்த் தொடர்ந்து செல். துயரங்களையும் துஷ்டர்களையும் துச்சமாகப் புறந்தள்ளித் துணிந்து செல்!
உனக்காகத் தம்முயிரையும் கொடுக்க  இலட்சக்கணக்கான இளைஞர்கள் சித்தமாயிருக்கிறார்கள்; உனக்காக-உனது வெற்றிக்காக-நோன்பு நோற்று துஆ செய்யப் பல இலட்சம் தாய்மார்கள், தந்தையர்கள்  இருக்கிறார்கள். ஆதலால், உனது மகத்தான பயணம் தடைகள் அத்தனையையும் தகர்த்தெறிந்து தொடரட்டும்.
அல்லாஹு அக்பர்!
எஸ். ஹமீத்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *