Breaking
Sat. Apr 20th, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் நண்டு நகரம் என்ற திட்டத்தில் நண்டு வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி வாரத்தை முன்னிட்டு மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

வாகரையில் இருநூற்றி ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு நண்டு நகரம் எனும் திட்டம் இலங்கை தேசிய நீர்வாழ் அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எதிர்காலத்தில் புதுவகையான திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டு வருகின்றோம். இவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு நீங்கள் முன்னேறி வருவீர்களாக இருந்தால் வங்கிகள் உங்களுக்கு உதவிகளை வழங்க முன்வருவார்கள்.

தாம் ஒவ்வொருவரும் செய்கின்ற தொழில்களில் நவீன முறையில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பவர்களாக மாறுவோமாக இருந்தால்; எனது அமைச்சின் மூலமும் பல்வேறுபட்ட உதவிகளை வழங்குவேன் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கரையோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *