Breaking
Sat. Apr 20th, 2024

சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடியவர்களை இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

தம்பலகாமப் பகுதியில், இன்று (06) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்,

“ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை ஜனாதிபதி சொல்வதைப் போன்று 150 ஆசனங்களையோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொல்வதைப் போன்று 113 ஆசனங்களையோ எந்தப் பெரும்பான்மை கட்சிகளும் பெற முடியாது. ஆகக் குறைந்தது 105 ஆசனங்களையே பெற முடியும். இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த கட்சிகள் இணைந்து, 45 அல்லது 55 ஆகக் குறைந்தபட்ச ஆசனங்களைப் பெற முடியும் .

இதை விடுத்து மக்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், பீதியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் விதத்தில், மக்கள் மத்தியில் அறிக்கைகளை விட்டு வருகிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தை ஏப்ரல் 26 ஆம் திகதி சிறுபான்மை மக்கள் தீர்மானிக்க வேண்டும். மாவட்டத்திலும் தேசியத்திலும் குரல்கொடுக்கக் கூடிய, எந்த சவாலுக்கும் முகங்கொடுக்கக் கூடியவர்களை நாடாளுமன்றம் அனுப்புங்கள். இதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடும் பட்சத்தில் உரிமைகளை இழந்து, அடிமைச் சமூகங்களாக மாற்றப்பட்டு விடுவோம்.

சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆட்சி அதிகாரத்தை, எம்மால் கண்டுகொள்ள முடியும்.

சமூகத்தின் இறுப்பை பாதுகாக்கக்கூடிய, மக்களின் உரிமைகளை வென்றெடுக்க துணிச்சலுடன் பணியாற்றக் கூடிய தலைவர்களை, இம்முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் சக்தியாக மாற வேண்டும்” என்றார்.

 

Related Post