அமெரிக்காவில் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற விழுந்த காரிலிருந்து 14 மணி நேரத்துக்குப் பிறகு பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார்.அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
லின் குரூஸ்பெக் (25) என்ற பெண், தனது 18 மாதக் குழந்தை லில்லியுடன் சால்ட் லேக் நகருக்கு 80 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்பானிஷ் ஃபோர்க் நகர ஆற்றுப்பாலம் வழியாக வெள்ளிக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தார்.
பாலத்தை அந்தக் கார் கடந்தபோது திடீரென தடுப்புச் சுவரில் மோதி ஆற்றுக்குள் விழுந்தது.
கார் விபத்துக்குள்ளாகிக் கிடப்பதை சில மணி நேரம் கழித்துப் பார்த்த மீனவர் ஒருவர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.அதனையடுத்து, மீட்புக் குழுவினர் அந்தக் காரை ஆற்றுக்குள்ளிருந்து வெளியே இழுத்தனர்.
அந்தக் காருக்குள் “சீட் பெல்ட்’ மூலம் இருக்கையில் பிணைக்கப்பட்டிருந்த குழந்தை லில்லியை, விபத்து நேரிட்ட 14 மணி நேரம் கழித்து மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். எனினும், இந்த விபத்தில் லின் குரூஸ்பெக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த நிலையில் குழந்தை லில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். லில்லி அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை எனினும், உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.