மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன்.
இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக நாம் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்ததுடன் அவரது உரையை கேட்பதற்காக பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தோம்.
ஆனால், எமது சமூகத்தைப் பற்றியோ அல்லது எமது வரலாற்றை பற்றியோ அவர் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. நான் அந்த சமூகத்தை சார்ந்தவன் என்ற வகையில் இவ்விடயம் எனக்கு மனவேதனையை தருகின்றது.
இந்திய பிரதமருடன் இன்று இடம்பெறவுள்ள நேரடி சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக அவரது கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன்” என்றார்.