சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு இலங்கையின் புதிய அரசாங் கம் அனுமதிக்காது என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சீனப் பிரதமர் லி கிகியாங், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோரை
சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
நேற்று பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைப் போல, சீன நீர்மூழ்கிகள் இலங்கைத் துறைமுகத்தை அணுக புதிய அரசாங்கம் அனுமதிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர்,
“ஜப்பானியப் பிரதமர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நாளில், சீன நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்தை அடைய வழிவகுத்த சூழல் என்னவென்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. ஆனால் நாம் அத்தகைய சம்பவங்கள், எமது பதவிக்காலத்தில் எந்தத் தரப்பில் இருந்தும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவோம்.
புதிய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மையத்துக்கு மீண்டும் நகர்த்தப்படும். அதன் மூலம் இன்னும் கூடுதலான நடுநிலை நிலைப்பாடு ஏற்படுத்தப்படும். நடுநிலைக்குத் திரும்புதல் என்பதுஇ ராஜபக் ஷவினால் சீனாவுடன் ஏற்படுத்தப்பட்ட நெருக்கமான உறவை நீர்த்துப் போகச்செய்வதல்ல.
நடுநிலைக்குத் திரும்புவதால் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது. அவர்கள் அந்த இடத்திலேயே இருப்பார்கள். உலகின் மற்ற நாடுகளைப் போலவே, சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்தவும் நாம் முயற்சிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சர்வதேச ரீதியிலும் பிராந்தியத்திலும் இலங்கையும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று உதவிகரமாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
‘சர்வதேசத்திலும் பிராந்தியத்திலும் என்ன வகையான மாற்றங்கள் ஏற்பட்டாலும், எங்கள் இரண்டு நாடுகளிலும் என்ன வகையான மாற்றங்கள் ஏற்பட்டாலும் இரண்டு நாடுகளும் எமது பாரம்பரிய நட்புறவை பேண வேண்டும் என்று இருதரப்பும் நம்புகின்றன’ என்றும் வாங் யீ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே, மங்கள சமரவீர அங்கு சென்றுள்ளார். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர், இலங்கையின் முக்கிய பொருளதார பங்காளியாக சீனா மாறியிருந்தது. தென்னிலங்கையில் துறைமுகம் ஒன்றும் விமான நிலையம் ஒன்றும் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.