வங்காளதேச முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தனது ஆட்சிக்காலத்தின்போது அரசு பணத்தில் சுமார் ஆறரை லட்சம் அமெரிக்க டாலர்களை சுருட்டியதாக அவர் மீது இரு ஊழல் வழக்குகளை தற்போதைய ஷேக் ஹசினா தலைமையிலான அரசு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் கோர்ட்டுக்கு வராததால் கடந்த மாதம் 25-ம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது, இந்த கைது வாரண்டை ரத்து செய்யும்படி கலிதா ஜியாவின் வக்கீல் இன்று நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அபு அஹமத் ஜொமாடர், ‘தொடர்ந்து வாரண்டுகளை அனுப்பியும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் ஒருவருக்கு ஆதரவாக அவரது வழக்கறிஞர் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கலிதா ஜியா நேரில் ஆஜராக கால அவகாசம் அளிக்க வேண்டும் என அவரது வக்கீல் இன்றும் வாதாடினார். அதனை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி, இவ்வழக்கின் மறுவிசாரணையை அடுத்த (ஏப்ரல்) மாதம் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த மறுவிசாரணைக்கு முன்னதாக கலிதா ஜியாவை கைது செய்து, நீதிபதியின் முன்னர் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் மும்முரம் காட்டிவருவதாக தெரிகிறது. இந்த இரு ஊழல் வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கலிதா ஜியாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.