எம்.எம் மின்ஹாஜ்
நாட்டில் நல்லாட்சி நிலவுவதனால் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டியதில்லை. தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் இசைத்தால் போதுமானது.
இவ்வாறு சென்றால் தேசிய கொடியில் சிங்கத்தை அகற்றுமாறும் கோருவர். இதற்கு எதிர்ப்பு வெளியிட்டால் எம்மை இனவாதிகள் என்பார்கள் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
உலகில் எங்கும் இல்லாத நல்லாட்சி இலங்கையில் நிகழ்கின்றமை நகைப்புக்குரியது. இந்த நல்லாட்சியில் சிறுப்பான்மையினருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சாடினார்.
கிருலப்பனை பொது பல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், தற்போது தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்கப்படவேண்டும் என கோரப்படுகிறது. தற்போது நாட்டில் நல்லாட்சியே காணப்படுகிறது.
அதனால் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் இசைத்தால் போதுமானது. சிங்களத்தில் பாட வேண்டிய தேவை கிடையாது.
நல்லாட்சியில் நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படுவதில்லை. ஆகவே தற்போது சிங்கள மொழிக்கு உரிய வகையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
ஆங்கில மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆகையால் தேசிய கீதம் தொடர்பிலான சர்ச்சை குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை.
தற்போது தேசிய மொழியில் பாடக் கோரும் போது அடுத்த தரப்பினர் அரபு மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கோருவார்கள்.
இந்நிலையில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் இசைக்க வேண்டியதில்லை.
தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழியில் மாத்திரம் இசைத்தால் போதுமானது.
மேலும் நல்லாட்சி இவ்வாறே பயணித்தால் தேசிய கொடியில் உள்ள சிங்கத்தை அகற்றுமாறும் கோருவார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் எம்மை இனவாதிகள் என்று கூறுவார்கள்.
உலகில் எங்கும் இல்லாத நல்லாட்சியே இங்கு நிலவுகிறது. இந்தியாவில் கூட ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என்றார்.