ஆப்பிரிக்க நாடுகளில் பலவற்றில் மனிதனை நரபலி கொடுத்து பூஜை செய்யும் பழக்கம் இப்போதும் உள்ளது. இதன் மூலம் வெற்றி கிடைப்பதாகவும், வீட்டிற்கு நன்மை கிடைப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் தான்சானியா நாட்டில் ஒரு வயது ஆண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சாட்டோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஈஸ்டர்ஜனாஸ் (வயது 30) என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் இருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் தாயை கடுமையாக தாக்கிவிட்டு அவரிடமிருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக பறித்து சென்றனர்.
அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையே அங்குள்ள காட்டு பகுதியில் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் 2 கால்களும், 2 கைகளும் துண்டிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு இருந்தன.
தான்சானியா நாட்டில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் வெற்றிக்காக இதுபோல் நரபலிகொடுப்பதை அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குழந்தையையும் அரசியல்வாதிகள் தான் கடத்திச்சென்று நரபலி கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.