Breaking
Sat. Apr 20th, 2024

-சத்தார் எம் ஜாவித்

முஸ்லிம் சமுகம் கடந்த முப்பது வருட காலத்தில் யுத்தம் காரணமாக உடல் ரீதியாக ஒரு விதமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து துன்பப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் தற்போது இன்னுமொரு விதத்தில் அதாவது பொதுபல சேனா என்ற அரக்கர்களினால் உணர்வு ரீதியாக துன்பத்தை அனுபவித்து வரும் இத்தருணத்தில் ஊவாத் தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

உண்மையில்  சிறுபான்மையினர் என்ற வகையில் இத்தேர்தல் ஒரு முக்கியமான கருவியாகவே கருதப்பட வேண்டியுள்ளது. காரணம் முஸ்லிம் சமுகத்தை புறந்தள்ள நினைக்கும் காடையர் கும்பல்களுக்கு பாடம் புகட்டும் வகையிலும் அவர்கள் செய்துவரும் அநியாயங்கள் அட்டூழியங்கள் மற்றும் கொலைக் கலாசரத்திற்கு எதிராக முஸ்லிம் சமுகத்தின் வாக்கு வெற்றியைக் காட்டும் வகையில் அமைய வேண்டும்.

அத்துடன் நீதி, நியாயம் மற்றும் சமாதானம் என்பனவற்றை நிலை நாட்டவும், குற்றவாளிகள் அவர்கள் இழத் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அழுத்தங்கள் கொடுக்கக் கூடிய வகையில் பேரம் பேசும் சக்தியாக முஸ்லிம் சமுகம் மாறுவதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகமம் தமது தன்மானத்தைக் காக்க வாக்களிக்க வேண்டும் என்பதும் தற்போதைய கட்டாயமுமாகும்.

இந்த வகையில் கடந்த காலங்களில் எதிரும் புதிருமாக இருந்த முஸ்லிம்  அரசியல் கட்சிகள் தற்போது இனவாதத்தின் கெடுபிடிகள், அட்டகாசங்களின் பின்னணியில் அவர்களின் முட்டாள் தனமானதும் துரோகத்தனமானதுமான செயற்பாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில் ஒன்றுபட்டமை நல்ல சகுனமாக இருக்கும் இத்தருவாயில் வாக்காளர்களும், ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகளும் பெரும்பான்மை மாயைகளுக்கு விலைபோய்விடாது நிதானமாக செயற்பட வேண்டிய தருணமாகும்.

ஏதிர் காலத்தைப் பொருத்த வரை இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம் சமுகத்திற்கும் அவர்களின் கலை கலாச்சார விடயங்களுக்கு எதிராகவும் சதி செய்வதற்கு இனவாதிகள் தற்போது தயாரிகிவிட்டனர் என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதுபோல் அதனை இலங்கை முஸ்லிம் சமுகம் இனிவருங் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டும் இல்லாவிட்டால் கடந்த காலங்களை விட மோசமான அவலங்களையும், துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி நேரிடலாம்.

அத்துடன் முஸ்லிம் சமுகம் இலங்கையில் எங்கும் நீதி, நியாயங்கள் தேடி செல்ல முடியாது குறிப்பாக இந்த அரசாங்கத்தில் சிறிதளவேனும் அதனை எதிர் பார்க்க முடியாது மாறாக ஒன்றும் செய்ய முடியாது தாண்டவமாடும் இறுக்கமான நிலைமைகளே காணப்படும்.

இலங்கையின் நிலைமைகள் இனவாத அடிப்படையில் மிக மோசமான நிலைமைகளையே தாண்டிச் செல்கின்றன. சமாதானத்திற்கு எந்தவிதத்திலும் இடமில்லை. எந்தவொரு சமாதான விரும்பிகளும் சமாதான முன்னெடுப்புக்களை செய்யும் போது அதற்கு எதிராக இனவாத ஒட்டர்கள் சமயத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் பாரிய மனித உரிமை மீறல்களை செய்கின்றனர். அனைத்துச் சமாதான செயற்பாடுகளையும் முடக்கும் விடயத்தில் விரைவாகச் செயற்படுவதை பல சம்பவங்கள் காட்டி நிற்கின்றன.

மேற்படிச் செயற்பாடுகளுக்கு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சில தீய புள்ளுரிவிகள் இனவாதிகளுக்கு முழு ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கி அரசாங்கத்தை அராஜகத்தின்பால் இட்டுச் செல்வதற்கு துனைபோகின்றமையை இன்று காணக் கூடியதாகவுள்ளது. பல எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் தீய செயற்பாட்டாளர்களின் மேற்படிக் காடைத்தனங்களை சுட்டிக்காட்டி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரசாங்கத்தில் இருக்கும் சமாதானத்தையும் இன ஒற்றுமையையும் விரும்பும் அமைச்சர்களைக் கூட கெட்ட வார்த்தைகளால் துவம்சம் செய்யும் இனவாத பௌத்த தேரர்கள் செயற்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான வார்த்தைகளைப் பேசி வஞ்சித்ததன் காரணமாக இன்று அரசியல் அனுபவங்கள் கொண்ட அமைச்சர்கள் கூட இனவாத்திற்கும் இனவாத பௌத்த தேரர்களுக்கும் எதிராக போர்க்கொடி தூக்கும் நிலைமைகளும் ஏற்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக பொதுபல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும், சங்கைக்குரிய மகா நாயக்கர்களை சந்தித்து காவி உடை தரித்த சண்டியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களின் இனவாதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் பௌதத் தர்மத்தைப் பாதுகாக்கவும் ஒரு சில தீய தேரர்களால் மற்றய சமுகத்தினர் பௌத்த தர்மர்த்தை தவறாக விளங்கிக் கொள்ளாது இருக்க நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மைகள் மிகவும் விரிவடைந்து செல்லும் போக்கு மக்கள் மத்தியில் கவலைகளையும் தோற்றுவித்து வருவதுடன் எதிர் காலத்தில் சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகள் அற்றுப் போகும் நிலைமைகள் ஏற்பட்டு வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளின் மத்தியில் இன்று ஊவா மாகாண சபைத் தேர்தல் கடும் சூடு பிடித்துள்ளது. நான் முந்தி நீ முந்தியென பல அரசியல் கட்சிகளும், சுயற்சைக் குழுக்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளை  தற்போது காணக் கூடியதாகவுள்ளது.

பிரதான எதிர்க் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி, சரத் பொன்சேகாவின் கட்சி, ஜே.வி.பி என்பனவற்றிற்கு மேலாக ஆளுங் கட்சிக்குள் உள்ள விமல் வீரவன்சவின் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பல கட்சிகள் பிரிந்து நிற்பதால் அரசாங்கம் பல முனைத் தாக்குதல்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.

அத்துடன் மேற்படிக் கட்சிகள் அரசியல் ரீதியில் பிரிந்து தனித் தனியாக களமிறங்கி நிற்பதானது அரசுக்கு பெரும் சோதனைக்குரிய விடயமாக இருப்பதுடன் ஒரு சில அமைச்சர்கள் கூட அரசாங்கத்தின் நடவடிக்கைளில் நம்பிக்கையற்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை எலல்hம் தற்போது தாராளமாக நடந்தேறி வருகின்றன.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் அரசாங்கம் என்ன விலை கொடுத்தாவது ஊவா மாகாண சபையை கைப்பற்ற வேண்டும் என்ற பிரயத் தனத்தில் உள்ளமையை மற்றொரு பக்கத்தால் அவதாணிக்கக் கூடியதாகவுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் மற்றொரு விடயத்திலும் சற்று சிந்தனையைத் திருப்ப வேண்டியுள்ளது. அதாவது அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவது மட்டுமல்லாது பல சுயற்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன. காரணம்  சுயற்சைக் குழுக்களை கைப்பொம்மைகளாக வைத்து தேர்தலில் வாக்குகளைச் சிதரடிக்கும் ஒரு தந்திரோபாயங்களையும் அவை கையாண்டுள்ளன.

கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணம் போன்ற வற்றைவிட பீதியை ஏற்படுத்திய ஒரு மாகாண சபைத் தேர்தலாக ஊவாத் தேர்தலை இன்று கருத வேண்டியுள்ளது. அந்தளவிற்கு அதன் போட்டித் தன்மைகள் சூடு பிடித்துள்ளது.

அரசாங்கத்திற்கு தென்பகுதியில் மேற்படித் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக விளங்கவதுடன் இதில் வெற்றி பெறாவிட்டால் அது ஜனாதிபதித் தேர்தலில் பாரிய ஒரு சிக்கல் நிலைமைகளைக் கூட தோற்வித்து விடலாம் இந்த வகையில் அரசு மிகவும் அவதானத்துடன் காய் நகர்த்தி வருகின்றது.

இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வருமாக இருந்தால் அது முற்றிலும் இனவாதத்தால் ஏற்பட்ட விளைவுகளாகவே அமையும். யானை தனக்குத்தானே தலையில் மண்னை வாரிப்போட்டதுபோல் அரசாங்கம் மண் கௌவி விடும் நிலைமைகள் ஊவாத் தெர்தலில் பிரதிபலித்து விடக் கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

ஊவாத் தேர்தலில் அரசாங்கம் தமது அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் விடுதலைப் புலிகளை அழித்தமை போன்ற விடயங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்வைக்கவுள்ளன.

இதேவேளை எதிர்க்கட்சிகள் சமயங்களுக்கிடையிலான அடக்கு முறைகள், அளுத்கம மற்றும் பேருவளை அட்டூழியங்கள், விலைவாசிகள், சகாதார சீர்கேடுகள், பல்கலைக் கழக மாணவர்களின் அடக்கு முறைகள், மத வன்முறைகள், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், அரசியல் அடக்கு முறைகள் உள்ளிட்ட பல் வேறுபட்ட விடயங்களை முன் வைத்து தமது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க இருப்பதானால் பாரிய போட்டித் தன்மைகள் கொண்ட தேர்தலாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலைமைகளில் வாக்காளர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் சிறுபான்மைச் சமுகங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஏமற்று வித்தைகளுக்கு விலைபோகாது மிகுந்த அவதானமாக இருக்க வேண்டியுள்ளது.

காரணம் இலங்கையின் அன்மைக்காலங்களாக சிறுபான்மைச் சமுகங்கள் மத ரீதியாக பெரும்பான்மை பௌத்த இனவாதிகளால் பலவாறும் துன்பங்களை அனுபவித்து வருகின்றமையும் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இத்தேர்தலில் தமது ஒற்றுமையையும் காட்ட வேண்டியுள்ளது.

இந்த வகையில் தமிழ் மக்களைப் போன்று முஸ்லிம் மக்களும் அதிகமான முஸ்லிம் பிரதி நிதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் அதன் மூலமே தமது அடக்கு முறைக் கலாச்சாரத்திற்கு ஏதோ ஒரு வகையில் பாடம் புகட்டலாம்.

எனவே ஊவாத் தேர்தல் மக்கள் சிந்தித்து நிதானமாகச் செயற்பட வேண்டிதொரு தருணமாக இருப்பதுடன் கடந்த கால ஏமாற்று வித்தைகளுக்கு இடமளிக்காது எதிர் காலத்தில் முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் அரசியல் கொள்கையுடையவர்களின் பக்கம் இணைந்து செல்லும் வகையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தமத நல்ல முடிவுகளை எடுக்க வேண்டிய தேவைப்பாடே கட்டாயமானதாகும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *