Breaking
Sat. Apr 20th, 2024

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் மலசலகுழி சுத்திகரிப்பு பணியினை நிறைவேற்ற, மாநகர சபையில்  அதற்கான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தனியார் ஒருவர் அந்த பணியை செய்து வருகிறார். அவருடன் தொழில் போட்டிக்கும் ஆளில்லாத நிலையில் மலசலகுழி துப்பரவு செய்யும் சேவையை வழங்குவதற்காக, அந்த நிறுவனம் மிகவும் கூடிய தொகையை மக்களிடம் வசூலிப்பதை அண்மைக்காலங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. சுமார் 8500 ரூபா வரையான தொகை ஒரு தடவை சேவை வழங்குவதற்காக  மாநகர மக்களிடம் அறவீடு செய்யப்படுகின்றது. ஆனாலும், அந்த நிறுவனத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையானது திருப்திகரமானதாக இல்லை என மாநகர மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அந்த நிறுவனத்துக்கு குறித்த சேவைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, மக்களுக்கு  நிறைவான சேவையை வழங்குவதை உத்தரவாதப்படுத்த கல்முனை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ஷிபான் தெரிவித்தார்.

இன்று காலை   மருதமுனையில் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

பெற்றுக்கொள்கின்ற பணத்துக்கு நிறைவான சேவையை அந்த நிறுவனம் வழங்கவில்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. திருப்திகரமான சேவை இடம்பெறவில்லை என மக்கள் அறிவித்திருந்தாலும் கூட, அந்த நிறுவனம் அதனை மீண்டும் ஒருமுறை திருப்திகரமாக இலவசமாக செய்து கொடுப்பதற்கு முன் வருவதுமில்லை.

மேலும், மாரிகால காலநிலை நிலவுவதனால் இதனால் பலரும் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. மலசலகுழி சுத்திகரிக்கும் இயந்திரம் இருப்பதன் காரணமாக பலரும் பண்டையகால முறையை தற்காலத்தில் நாடுவதில்லை. ஆனால், இயந்திரங்களைக் கொண்டு நிறைவான சேவையை வழங்க கூடிய நிலை இருந்தும் மாநகர சபை எல்லைக்கு வரும் அந்த தனியார் நிறுவன இயந்திரம் நிறைவான சேவையை வழங்காமல், அதி கூடிய தொகையை மக்களிடமிருந்து அறவிடுவதானது பொருத்தமானதல்ல.

ஆகவேதான் மாநகர எல்லைக்குள் இருக்கின்ற கோழி கடைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை மேயர் அவர்கள் விதித்தது போன்று, மலசலகுழி சேவையை செய்கின்ற தனியார் நிறுவனத்துக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து மக்களுக்கு  நிறைவான சேவையை வழங்குவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Post