Breaking
Fri. Apr 19th, 2024

கிண்ணியாவில் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதுகின்ற முஸ்லிம் மாணவிகளுக்கு, மண்டப மேற்பார்வேயாளர்களாலும் கண்காணிப்பாளர்களாலும் பல இடையூறுகளும் அசௌகரியங்களும் ஏற்படுத்தப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கைப் பரப்புச் செயலாளரும், கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (04) அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், கிண்ணியா வலயத்தில் உள்ள மூன்று பரீட்சை மண்டபங்களில் பரீட்சை எழுதும் மாணவிகளுக்கே இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தனக்கு மாணவிகளால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.

“பரீட்சார்த்திகளின் காதுகள் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஹிஜாபை அகற்றி விட்டு, பரீட்சையை எழுதுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

“இச்செயற்பாடு, சிறு வயதிலிருந்து ஹிஜாபை அணிந்து பழக்கப்பட்ட மாணவிகளுக்கு பெரும் அசௌகரியத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதோடு, பரீட்சையை எழுத முடியாமல், அழுகின்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

“எனவே, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாதவாறு அனைத்து சோதனைகளையும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொள்ளுமாறும், அதற்கான வழி காட்டல்களை பாடசாலை அதிபர்கள் முன்னரே எடுத்துக் கூறி, தயார்படுத்த வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

Related Post