Breaking
Thu. Apr 25th, 2024
மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து எஸ்.எச்.எம்.முஜாஹிரை நீக்கி, முன்னாள் ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இரத்து செய்துள்ளார்.
 
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர், தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுவதாக கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி, அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது. முன்னாள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.
 
இந்நிலையில், மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து தன்னை நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக, முஜாஹிர் மேன் முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிப் பேரணை மனுவொன்றினை தாக்கல் செய்தார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
 
தன்னை மன்னார் பிரதேச சபை தலைவராக தொடர்ந்தும் பதவியில் இருக்கும் வண்ணமான கட்டளைப் பேராளை ஒன்றினை, வட மாகாண ஆளுநருக்கு பிறப்பிக்குமாறு மனுதாரர், தனது மனுவில் மேன் முறையீட்டு நீதிமன்றைக் கோரியுள்ளார். மன்னார் பிரதேச சபையின் முதல் முஸ்லிம் தலைவர் தானே எனக் கூறும் மனுதாரர், மன்னார் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட அபிவிருத்திகளை தான் திட்டமிட்டு முன்னெடுக்கும் நிலையில், தமக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தபப்டுவதாகவும் அதன் விளைவே தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன், எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி கந்தையா அரியநாயகத்தின் கீழ் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு, வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு, தனி நபர் விசாரணைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், தன் பக்க நியாயத்தை முன் வைக்க தனக்கு போதுமான சந்தர்ப்பத்தை அவ்விசாரணைக் குழு அளிக்கவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது இயற்கை நீதிக் கோட்பாட்டை மீரும் செயல் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
முஜாஹிர் எனும் மனுதாரராகிய தன்னை, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில், அப்பதவியில் பணிகள், கடமைகளை நிறைவேற்றும் போது, ‘1987 ஆண் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 185 (1)(இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை புரிந்தார்’ என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என திருப்தியடைவதாக கூறி, பதவி நீக்கம் செய்யப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி முதன் முறையாக மேன் முறையீட்டு நீதிமன்றின் சோபித்த ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதியும் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
 
முதலில் மனு பரிசீலிக்கப்ப்ட்ட திகதி முதலே, மன்னார் பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு புதிய தலைவர் ஒருவரை பெயரிட்டு, எந்த வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிடக் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் வட மாகாண சபையின் மாகாண ஆளுநருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது.
 
மனுதாரரான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட, தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், ருஷ்னி உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட் ஆஜராகிய நிலையில், பதவி நீக்கமானது சட்ட விரோதமானது என வாதங்களை முன்வைத்திருந்தனர்.
 
இவ்வாறான நிலையில், கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி மனு பரிசீலிக்கப்பட்டபோது, பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி மனோஹர ஜயசிங்க, வட மாகாணத்தின் புதிய ஆளுநர், மன்னார் பிரதேச சபை தவிசாளரின் பதவி நீக்கம் தொடர்பிலான விடயத்தை மீள் பரிசீலனை செய்யத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி, அந்த மனு நாளை மறு தினம் 16 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே, மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து முஜாஹிரை நீக்கி, முன்னாள் ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இரத்துச் செய்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
 

Related Post