Breaking
Tue. Apr 23rd, 2024

இன்றைய தினம் (06) சர்வதேச ஆசிரியர் தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான M.S.S.அமீரலி தெரிவித்துள்ளார்.

தனது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மிக உன்னதமான பணியான ஆசிரியப் பணியை செய்யும் உங்கள் அனைவரையும் இந்த நன்னாளில் கௌரவமாக நினைவு கூற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

நாட்டுக்குத் தேவையான நற்பிரசைகளையும், துறைசார் வல்லுனர்களையும் உருவாக்குவதிலே தங்களை மெழுகாக உருக்கி, உலகிற்கு ஒளியூட்டும் மகோன்னத பணி செய்யும் உங்களை வாழ்த்த கிடைத்தமையையிட்டு நானும் பெருமையடைகிறேன்.

நானும் சிலகாலம் இவ்வுயரிய பணியை மேற்கொண்டவன் என்ற வகையிலும், ஓர் ஆசிரியனின் மகன் என்ற வகையிலும், இப்பணியின் ஊடாகக் கிடைக்கும் ஆத்ம திருப்தியை இறைவன் எமக்குத் தந்த அருட் கொடை என்றே கூறுவேன்.

மற்றவரின் முன்னேற்றம் கண்டு அகமகிழும் ஒரே பணி இவ்வாசிரியப் பணி ஒன்றேதான். எனவேதான், இன்றைய நாளில் முழு உலகும் உங்களை பாராட்டி வாழ்த்துகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post