Breaking
Thu. Apr 25th, 2024

 

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஹமீத்திடமிருந்து ஒரு கடிதம்!

 பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் அந்தச் சமூகத்துக்கு எதிரான அட்டூழியங்களும் அநியாயங்களும் நடந்து வருவதே உலகின் விதியாகிப் போய்விட்டது. ஆனாலும், அந்தஅட்டூழியங்களையும் அநியாயங்களையும் எதிர்த்துப் போர் தொடுக்க அஞ்சா நெஞ்சமும் ஆண்மைத் திறனுமிக்க ஒருவரை எல்லாம் வல்ல அல்லாஹ் அவ்வப்போது அந்தச் சமூகத்திலிருந்து உருவாக்கி விடுகின்றான். அந்த வகையில் இலங்கையில் மூன்றாவது சிறுபான்மையினரான நமது சமூகத்தைத் தமது இஷ்டத்துக்குப் பந்தாடி வந்த ஏனைய இரு பெரும்பான்மையினரிடமிருந்தும் விடுவிக்க அல்லாஹ் முதலில் தேர்ந்தெடுத்த அகத் துணிவும் அழுக்கற்ற இதயமும் கொண்ட மா வீரர்தான் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்.

அஷ்ரப் நமது சமூகத்தின் தலைவராக உருவான காலம் முதல் அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டிக்கொடுப்புகளும் கழுத்தறுப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல. ஏனைய இரு பெரும்பான்மைச் சமூகங்களும் அவரை அடியோடு ஒழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டார்கள். அதையும்விட, நமது சமூகத்துக்குள்ளிருந்தே பலர் அவரை அழித்துவிட முயன்றார்கள். சிங்கள இனவாதிகள் அவரை இஸ்லாமியத் தீவிரவாதியென்றார்கள்.

கிழக்கிஸ்தானை உருவாக்கப் போகிறார் என்று கூச்சலிட்டார்கள். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்து கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்குகிறார் என்று ஓலமிட்டார்கள்.

தனது துறைமுக அமைச்சில் முஸ்லிம்களுக்கு மட்டுமே தொழில் வாய்ப்புகளை வழங்குகிறார் என்று குற்றம் சுமத்தினார்கள். மறுபுறம் தமிழ் இனவாதிகளும் அஷ்ரப் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள். தமிழர்களின் காணிகளை சுவீகாரம் செய்கின்றார் என்றார்கள்.

தமிழர்களைக் கொன்று குவிக்கிறார் என்று கூப்பாடு போட்டார்கள். தமிழர்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்கிறார் என்று கொக்கரித்தார்கள். சிங்களவர், தமிழர்கள் என்ற இந்த இரு சாரார் போக, நமது சமூகத்திலிருந்த சில புல்லுருவிகளும் அஷ்ரப் அவர்களுக்கு எதிராக இயங்கினார்கள்.

முன்னர் ஜே.ஆரிடமும், பிரேமதாஸாவிடமும் பின்னர் சந்திரிகாவிடமும் அஷ்ரப் அவர்களைப் பற்றிக் கட்டுக்கதைகளை இட்டுக்கட்டிச் சொன்னார்கள். சிங்களக் கடும்போக்குவாதிகளிடம் அஷ்ரப் அவர்களைப் பற்றிப் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆனால், அவை அத்தனையையும் தாண்டி அஷ்ரப் அவர்கள் தனது சமூகத்திற்கான பணிகளை மன உறுதியோடும், உள உவகையோடும் ஆற்றினார். அந்தத் தூய்மையான பணியின் பயணம் சதி மோச, நாசகாரக் கும்பலொன்றின் நயவஞ்சகத்தால் 2000ம் ஆண்டு இடையிலேயே முடிந்து போனது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அன்று அஷ்ரப் அவர்களை சிங்களக் கடும்போக்கு இனவாதிகளும் தமிழ்த் துவேஷ சிந்தனாவாதிகளும் எவ்வாறெல்லாம் எதிர்த்துப் பாடாய்ப்படுத்தினார்களோ அவ்வாறே இன்று முஸ்லிம் சமூகத்தின் தானைத் தலைவனாக வீறுடன் எழுந்து நிற்கும் உங்களையும் கொடுமைகளுக்கும் அவதூறுகளுக்கும் உட்படுத்தி இல்லாதொழிக்கப் பார்க்கிறார்கள்.உங்கள் வீரம், உங்கள் அஞ்சாமை, உங்கள் வேகம், உங்கள் விவேகம், ‘எனது மக்கள்…எனது சமூகம்’ என்ற உங்கள் வேட்கை, உங்கள் ஓய்வற்ற உழைப்பு, தளராதசேவை எல்லாமே சிங்களத் தமிழ் இனவாதிகளை மட்டுமல்ல, நமது முஸ்லிம் சமூகத்திலிருக்கும் சில சாக்கடை அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் கூட அடிவயிறு கலங்கச் செய்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் உங்கள் மீது அபாண்டங்களையும் அவதூறுகளையும் அள்ளியிறைத்து முஸ்லிம் சமூகத்துக்கான அரசியற் பயணத்திலிருந்து உங்களை ஓரம் கட்ட அவர்கள் முனைகிறார்கள்.அன்றும் கடும் போக்குப் புத்த பிக்குகள் மா தலைவர் அஷ்ரப் அவர்களோடுமோதினார்கள். சோபித தேரர் தொலைக்காட்சியில் நேரடி விவாதமே செய்தார். அது போன்றே இன்று புத்த பிக்குகளிற் பலர் உங்களோடு மோதுகிறார்கள்.

ஆனந்த தேரர் தொலைக்காட்சியில் உங்களோடு விவாதம் புரிகின்றார்.பாராளுமன்ற உறுப்பினரானோம், பிரதியமைச்சரானோம், அரசியல் அந்தஸ்துள்ள அமைச்சருமாகிவிட்டோம் என்று நீங்கள் அரசுக்கும் இனவாதிகளுக்கும் தலை சாய்த்து, உங்கள் சொகுசைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி இருப்பீர்களானால் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை.

ஒரு ஹக்கீமைப் போல, ஒரு ஹலீமைப் போல, ஒரு கபீர் ஹாஷிம் போல, சமூக அக்கறையில்லாமல் வளைந்து கொடுத்து வாழ்வீர்களானால் மௌத்து வரையிலும் யாருடைய எதிர்ப்புமின்றிச் சகல சுகபோகங்களுடனும் சந்தோஷமாக நீங்கள் வாழலாம்.

ஆனால், தெற்கிலும் மேற்கிலும் நமது சமூகம் பாதிப்புக்குள்ளாகும் போது குரல் கொடுக்கிறீர்கள். முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் எரிக்கப்படும் போது நள்ளிரவென்றும் பாராது உடுத்த உடையுடன் ஓடிச் சென்று மேலும் அழிவுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறீர்கள். அல்லாஹ்வையும் குர்ஆனையும் அவமதிப்போரை எதிர்த்து அறிக்கைகள் விடுகிறீர்கள்.

போதாதற்கு அவர்களுக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்கிறீர்கள். நமது சமூகம் எதிர்நோக்கும் பயங்கரவாதத்தைச் சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்கிறீர்கள்.27 வருடங்கள் அகதி முகாம்களில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியேற உதவி செய்கிறீர்கள். காடு மண்டிப் பாழடைந்து கிடக்கும் பூமியைச் சுத்தம் செய்து அந்த மக்கள் படுத்துறங்க வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறீர்கள். இதனாலல்லவா வில்பத்துவில் காடுகளை நீங்கள் அழிப்பதாகவும் காணிகளைப் பிடிப்பதாகவும் அவர்கள் கதை கட்டிவிடுகிறார்கள்.

ஹக்கீம் போல, எவன்செத்தால் என்ன, எவன் பிழைத்தால் என்ன என்று நீங்களும் இருந்தால், உங்களுக்கேன் பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் வரப் போகின்றன?வடக்கில் வாழும் முஸ்லிம்களை மட்டுமன்றி அங்கு வாழும் இனவாதச் சிந்தனையற்ற தமிழ் மக்களையும் கூட உங்களின் கண்களாகப் பாவித்து நீங்கள் சேவைகளைச் செய்து வருகிறீர்கள்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகளும் கல்விகற்கப் பாடசாலைகளும் போக்குவரத்திற்குப் பாதைகளும், பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும், தொழிற்பேட்டைகளும், சுயதொழில் வாய்ப்புகளும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுமென எண்ணற்ற முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இதனாலல்லவா அங்குள்ள தமிழ் இனவாதிகள் தங்கள் இருப்புப் போய்விடுமேயென்ற பயத்தில் உங்கள் மீது வசைமாரி பொழிகின்றார்கள். தங்களின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடுமென்றல்லவா உங்களை இல்லாமலாக்க வேண்டுமென்று சதித்திட்டங்கள் தீட்டிச் செயற்படுகிறார்கள். ஹக்கீம் போல டயஸ்போறாக்களின் காலை நக்கிக் கொண்டும் நம் சமூகத்தை அவர்களிடம் அடகு வைத்தும் நீங்கள் வாழ்வீர்களென்றால், அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் உச்சத்தில் வைத்துப் போற்றப்படுவீர்களே…!

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *