Breaking
Sat. Apr 20th, 2024

– முயினுதீன் அசாருதீன் –

“காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது பொறாமையும், எரிச்சலும் கொண்ட சக்திகள் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இல்லாத பொல்லாத பொய்களைக் கட்டிவிட்டு அவரை எப்படியாவது அரசியலில் இருந்து ஓரங்கட்டப் பார்க்கின்றனர்.

புலிகளால் துரத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டில் அவர் ஈடுபட்ட போது, தமிழ்ப் பேரினவாதிகள் கொடுத்த கரைச்சல் எண்ணற்றவை. முசலி மக்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறிய போது அமைச்சர் றிசாத் வில்பத்து காட்டை அழித்து அவர்களைக் குடியேற்றுகின்றார் என சிங்களப் பேரினவாதிகளும், மஞ்சள் சீலைக்காரர்களும் நீலிக் கண்ணீர் வடித்தனர். அமைச்சரைப் பாடாய்ப்படுத்தினர்.

மன்னார் கோந்தைப்பிட்டி விவகாரத்தில் அமைச்சரையும் தொடர்புபடுத்தி அவர் நீதிமன்றத்துக்கு கல்லெறிந்ததாக  இனவாதிகள் கதை சோடித்து அவரை குற்றவாளியாக்க முயற்சித்தனர்.

இத்தனைக்கும் மேலாக நமது சமூகத்தின் கோடரிக்காம்புகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அமைச்சரை திட்டித்தீர்த்து வருகின்றனர். இத்தனைக்கும் அவர் யாருடைய சோற்றிலும் மண்ணை அள்ளி போட்டவரல்லர். எந்தவொரு கட்சியின் தலைமைத்துவத்தையும் தட்டிப் பறித்து அரசியல் செய்து வருபவரும் அல்லர். தனது உழைப்பினால் உருவாக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபகராக அவர் இருந்த போதும் கட்சியின் தொடக்கக் காலத்தில் தலைமைப் பதவியை வேறொருவருக்கு வழங்கி அரசியல் செய்தவர். எனினும் பின்னாளில் தலைமைப் பதவி அவரைத் தேடி வந்தது. அது அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றியே.

மக்களுக்கு அவர் என்ன சேவை செய்கின்றார் என்பது மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.  எனினும் அவரை மிகவும் மோசமான அரசியல்வாதியாக காட்டும் முயற்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் இறங்கியுள்ளன.

முஸ்லிம் காங்கிரசுக்கு சமனாக வளர்ந்து வரும் மக்கள் காங்கிரசின் தலைவராக அவர் செயற்பட்டு வருவதால், மு.கா தலைமையிடம் நல்ல சபாஷ் ஒன்றை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அமைச்சர் றிசாத்தை தூற்றுவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அமைச்சருடன் கூட இருந்து சுகபோகங்களை அனுபவிக்க முடியுமென்ற எண்ணத்தில் நிறைவு காணாததால் அவரை விட்டு நீங்கி அவரை தூசிப்பவர்கள் இன்னொரு சாரார்.

அமைச்சர் றிசாத்துடன் இணைந்து அரசியலுக்குள் நுழைந்து பதவி பட்டங்களைப் பெற்றவர்கள், அவர்களுடைய முழு நோக்கமும் நிறைவேறாததால் வெளியேறி, அவரை தூற்றுபவர்கள் இன்னுமொரு கூட்டம். இவ்வாறு பல சாரார் இருந்த போதும் அவர்களுடைய ஒரே இலக்கு அமைச்சர் றிசாத்தை வீழ்த்துவதே.

சில சமூகவலைத்தளங்களிலும், முகநூல்களிலும் நாளாந்தம் சில வளர்ப்பிணிகள் அவரை கொச்சைப்படுத்தி வருவதை நாம் காண்கின்றோம். இதற்கென்றே பிரத்தியேகமாக முகநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் “தளம்” என்ற இணையத்தளம் ஆகும். இதன் சூத்திரதாரி அக்கரைப்பற்றைச் சேர்ந்த பௌமி என்பவர். இவர் தன்னை ஒரு சமூகவாதியாகக் காட்டிக்கொண்டு, கடந்த காலங்களில் தனது ஊத்தை எழுத்துக்களைக் கொண்டு பத்திரிகைகளை வெளியிட்டு வந்தவர். ஆரம்பத்தில் “தினமணி” என்ற பத்திரிகையை அரசியல்வாதிகளிடம் கெஞ்சிக்கூத்தாடி பெற்ற பணத்திலிருந்து நடத்தி வந்தார். பணம் கொடுக்காத அரசியல்வாதிகளைத் தாறுமாறாகத் திட்டுவார். இது அவரது பரம்பரைப் பழக்கம். அதன் பின்னர் மழைக்கு முளைத்த காளான் போல இன்னும் சில சஞ்சிகைகளை வெளியிட்டு வந்தார். பின்னர் “நிஜம்” என்ற சஞ்சிகையை வெளியிட்டு ஒரேயொரு இதழுடனேயே அதனையும் நிறுத்திக்கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் சில அரசியல் வாதிகளின் தூண்டுதலினால் அமைச்சர் றிசாத்துக்கு எதிராக மிகவும் மும்முரமாக செயற்பட்டார். முன்னொரு காலத்திலே அமைச்சர் றிசாத்தை சுற்றிச்சுற்றி வந்த அவர் தான் எதிர்பார்த்தவைகள் கிடைக்காத காரணத்தினாலோ என்னவோ பின்னர் மிகவும் மோசமாக விமர்சிக்கத் தொடங்கினார். இப்போது தளம் என்ற போலி இணையத்தளத்தை தொடங்கி இல்லாத பொல்லாத இட்டுக் கதைகளை அமைச்சர் மீது சுமத்தி வருகின்றார். அவரது லேட்டஸ்டான கற்பனைக் கதையே அமைச்சர் றிசாத் பேரீத்தம் பழத்தில் மோசடி செய்ததாகக் கூறி அதில் சில அரசியல்வாதிகளையும்  துணைக்கழைத்து வெளியிட்ட பொய்யான செய்தி.

அமைச்சர் றிசாத் தனது சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுத்த பேரீத்தம் பழத்தில் மோசடி இடம்பெற்றதாக இவர் கூறுவது எத்தனை வேடிக்கையானது.

மன்னார் நீதிமன்ற வழக்கில் நீதிக்குப் புறம்பாக நின்று அமைச்சர் றிசாத்தை கூண்டுக்குள் அனுப்ப முடியுமென்று கங்கணம்கட்டி நின்ற நீதித்துறை சார்ந்தவர் ஒருவர் எவ்வாறு பித்துப் பிடித்து தற்போது அலைகின்றார்.  அதேபோன்று றிசாத்தை கேவலப்படுத்திய அரசியல்வாதிகள் இன்று அரசியலில் தாம் இருந்த இடம் தெரியாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். அவ்வாறில்லாமல் இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் அமைச்சர் றிசாத்தை தூற்றி வருபவர்களுக்கு இவ்வாறான பரிதாபம் வராமல், இந்தப் புனித ரமழானில் அல்லாஹ் நேர்வழியைக் காட்டுவதற்கு அருள் புரிய வேண்டுமென நான் “நிஜம்” ஆக பிரார்த்திக்கின்றேன்.

 

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *