Breaking
Tue. Apr 23rd, 2024
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து, புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலரும் எடுத்த முயற்சியினால் இன்று அந்த பிரதேசத்தில் சிறிய பதட்டம் நிலவியது.
 
கடந்த சில நாட்களாக அங்கு வருகை தந்த சிங்கள இளைஞர்கள் சிலர் சிலை நிறுவும் ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும், இன்று காணிபூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோதே இந்த முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளதாகவும்  பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
ஸ்தலத்திற்க்கு நேரடியாக வருகை தந்த மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், அட்டாளைசேனை பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கின் கேடயம் அமைப்பினர் மற்றும் பிரதேச மக்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் தலையீடுகளுடன், அரசாங்க அதிபரூடாக பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அங்கிருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

Related Post