Breaking
Thu. Apr 25th, 2024

– ஏ.எஸ்.எம்.ஜாவித் –

முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச்.முஹம்மத் கடுமையாக சுகயீனமுற்று இருந்த நிலையில் இன்று (26) காலை காலமானார்.

1921ம் ஆண்டு பிறந்த எம்.எச். முஹம்மத், 1956ம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினூடாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் கொழும்பு மேயர், பொரளைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் , சபாநாயகர் என்று பல பதவிகளை அலங்கரித்துள்ளார்.

கொழும்பின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ள அவர், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான சேவைகளை ஆற்றியுள்ளார்.

அத்துடன் கொழும்பு இஸ்லாமிய நிலையத்தின் ஆயுட்காலத் தலைவரான எம். எச். முஹம்மது, அதனூடாக கொழும்பின் ஏழை மக்களுக்கு மருத்துவம், சுயதொழில் வாய்ப்பு என்று எண்ணற்ற சேவைகளை அளித்துள்ளார்.

கொழும்பு பொரளைத் தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளராக இருந்த அவர், சிங்கள மக்கள் தொடர்ச்சியாக உள்ள அத்தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றியீட்டி வந்திருந்தார்.

2006ம் ஆண்டில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் கரு ஜயசூரிய தலைமையில் எம்.எச். முஹம்மதுவும் மஹிந்தவின் அரசாங்கத்துடன் இணைந்திருந்தார்.

அவருக்கு மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.

அதன் மூலம் பொரளை சஹஸ்புர, தெமட்டகொடை என்று ஏராளம் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அவர், பிரேமதாச யுகத்தின் பின்னர் கொழும்பில் கூடுதலான தொடர்மாடித் திட்டங்களை அமைத்த பெருமையைப் பெற்றுள்ளார்.

அதன் பின்னர் கடந்த 2010ம் ஆண்டு தேர்தல் தொடக்கம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எச்.முஹம்மது தொடர்ந்தும் சமூக சேவை விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக்  கொண்டார்.

.இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (26.04.2016) அஸருக்குப் பின்னர் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *