ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோருக்கு இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா கவர்ச்சிமிக்க மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவலாக காணப்படுகின்ற நாடு என்ற வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் குடியகல்வு அதிகரித்து வருகின்ற நிலைமையை கருத்திற்கொண்டு, அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் சாதகமான பதில் அளித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.