கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால், முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு, பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற, வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, தனது கன்னி உரையை ஆற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பில், நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி செலுத்துகின்றோம். ஆனால், மார்ச் மாத காலப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த காலத்திலேயே, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், புனித ரமழான் நோன்பும் இந்த காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்படும். அதனால், நோன்பு காலத்தில் பரீட்சை இடம்பெறும்போது, முஸ்லிம் மாணவர்களுக்கு அது பாதிப்பாக அமையும். எனவே, இந்த விடயத்தை கருத்திற்கெண்டு அரசாங்கம் பரீட்சை நேர அட்டவணையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக பாதிக்கப்பட்டவர்களாகும். இந்த மாவட்டங்களில், மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த காரணமாக, வனவள திணைக்களம் அந்த மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு, அந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்திருக்கிறது. இதனால், அங்கு விவசாயம் செய்துவந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, வுவுனியா மாவட்டத்தில் பம்பமடு பிரதேசம், குப்பை கூளங்களை சேகரிக்கும் பிரதேசமாக இருக்கிறது. அதன் மேற்குப்பக்கம் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கிம்ன்றார்கள். அதேபோன்று, வீதிக்கு மறுபக்கத்தில் வவுனியா பல்கலைக்கழகம் அமையப்பட்டுள்ளது. இந்தக் குப்பைமேட்டினால் ஏற்படுகின்ற துர்வாடை காரணமாக, அந்த மக்களும் மாணவர்களும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, அந்தப் பிரதேசத்தில் இருக்கும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளின் கழிவுகளும் அங்கு கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.
எந்தவொரு பாதுகாப்பு வேலியும் இல்லாத காரணத்தினால், கால்நடைகள் அங்கு கொட்டப்படும் எச்சங்களை எடுத்துச்சென்று, கிராமங்களுக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் போடுகின்றன. இதுதொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.