Breaking
Fri. Apr 26th, 2024
இலங்கையும், எகிப்தும் நீண்டகால நட்பு நாடுகளாகவும்,  நெருக்கமான உறவை கொண்டவையாகவும், வலுவான பொருளாதார உறவை வளர்ப்பவையாகவும் இருப்பதாக  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று மாலை (16.07.2018) எகிப்திய தேசிய தினவிழா நடைபெற்றபோது அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட அமைச்சர்  மேலும் கூறியதாவது, 
முன்னாள் அரச தலைவர்களான  ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மற்றும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் நெருக்கமான நட்பையும், இறுக்கமான இணைப்பையும் கொண்டு செயற்பட்டதோடு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டு ஸ்தாபக தலைவர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர். அதன் வழித் தொடர்ச்சியாகவே இரண்டு நாடுகளின் உறவுகள் பரினமிக்கின்றன.
உலக சரித்திர சம்பவங்களை எடுத்துக் கொண்டால், பரஸ்பர நாடுகளின் உறவுகள் நெருக்கமடைந்ததற்கு சில நிகழ்வுகள் வழிவகுத்திருக்கின்றன. இலங்கையிலே 1883 – 1991 ம் ஆண்டு வரை ‘அஹமட் ஒராபி பாஷா’ எனும் மிகப் பிரபல்யம் பெற்ற எகிப்திய நாட்டைச் சார்ந்தவர் வாழ்ந்திருக்கின்றார். அத்துடன் 1983ம் ஆண்டு கண்டியில் ஒராபி பாஷா நூதனசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டதை நினைவூட்டவிரும்புகின்றேன். அதுமாத்திரமன்றி, கெய்ரோவில் இலங்கை தூதரகம் அமைந்திருக்கும் இடத்திற்கு எதிரே ஒராபி பாஷாவின் புராதன வீடு ஒன்று  அமைந்துள்ளதோடு, தூதரகம் அமைந்திருக்கும் வீதியானது ஸ்ரீலங்கா வீதி (Sri lanka Street) எனவும் அழைக்கப்படுகின்றது.
இலங்கைக்கும் எகிப்துக்குமிடையிலான இராஜதந்திர உறவின் 61வது ஆண்டின் விஷேட கொண்டாட்டங்கள் இரண்டு நாடுகளின் தலைநகரிலும் இடம்பெற ஏற்பாடாகியிருப்பது முக்கிய மைல்கல்லாக அமைகின்றது. இம்மாத இறுதிப் பகுதியில் எமது நாட்டின் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான 13 பேர் அடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய குழு ஒன்று இந்த சிறப்பான நிகழ்விற்கு பங்கேற்க கெய்ரோவுக்கு பயணமாகவுள்ளது.
கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் நமது இரண்டு நாடுகளின் நட்புறவை மேலும் இறுக்கமாக கட்டியெழுப்ப உதவிவருவது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கைக்கும் எகிப்துக்குமிடையே வரலாற்று ரீதியிலான  வர்த்தக தொடர்பும் உண்டு.  இலங்கையானது எகிப்தின் முன்னணி  தேயிலை ஏற்றுமதி நாடாக திகழ்கின்றது. தேயிலை ஏற்றுமதித் துறை உள்ளடங்கிய கடந்தவருட மொத்த வர்த்தகமானது 48மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் எகிப்துக்கான 30 சதவீதமான எமது ஏற்றுமதி பொருட்கள் தேயிலை மற்றும்  இறப்பர் டயர் , தெங்கு உற்பத்தி பொருட்களாகும். கடந்த 5 வருட காலப்பகுதியில் எகிப்துக்கு இலங்கையானது 46 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதுடன், கடந்தவருடம் மாத்திரம் 6.4மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதியாகியுள்ளது. அதே போன்று, இறக்குமதியை எடுத்துக்கொண்டால் எகிப்து நாட்டிலிருந்து எண்ணெய்த் திரவியங்கள், சினீ மற்றும் பழவகைகள் உள்ளடங்கிய பொருட்களை அதாவது, மொத்த இறக்குமதியில் 32சதவீதமானவற்றை இறக்குமதி செய்துள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மக்களின் சார்பாக எகிப்தின் ஜனாதிபதி  அப்டல் பட்டா எல்சிசி மற்றும் எகிப்து நாட்டு மக்களுக்கு இந்த நந்நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு- 

Related Post