Breaking
Fri. Apr 26th, 2024
புத்தளம் மாவட்ட, சிறுபான்மை சமூகம் இழந்துள்ள பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக, தராசுச் சின்னத்தில் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுவதாக தெரிவித்த வேட்பாளர் அலி சப்ரி ரஹீம், கடந்த காலங்களில் எமது மக்கள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாராளுமன்றம் அனுப்பியதற்கு பதிலாக இன்று எம்மை அவர்கள் தாக்குகின்றனர் என்றும் கூறினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசுக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் அலி சப்ரியை ஆதரித்து, புத்தளம், நுஹ்மான் மண்டபத்தில் நேற்று மாலை (17 ) இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“கடந்த 33 வருடங்களாக, புத்தளம் தொகுதி சிறுபான்மை மக்கள், தமக்கான ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவமின்மையால் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடத்தில் கையேந்தும் நிலையே காணப்பட்டு வந்தது. 150,000 சிறுபான்மை வாக்குகளை வைத்துக்கொண்டு, நாம் இந்தப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறாமைக்கு  காரரணமாக நாங்களே இருக்கின்றோம்.
வென்னப்புவ முதல் ஆனமடுவ வரையில் கேட்கும் வாக்காளர்களுக்கு, எமது  விருப்பு வாக்குகளை அளித்து, அந்த வெற்றியினை கொடுக்கின்றோம். ஆனால், அவர்கள்  வெற்றி பெற்றதன் பின்னர் எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதனை மாற்றுவதற்கு தேவையான, சரியான சந்தர்ப்பம் இம்முறை எமக்குக் கிட்டியுள்ளது.
பாராளுமன்றம் என்பது  பேச்சுப் போட்டி நடாத்தி, அதற்கு புள்ளி வழங்கும் இடமல்ல. மாறாக அது  மக்களின் குறைகளை முன்வைத்து, அதற்கான தீர்வினைப் பெறும் இடம் என்பதுடன், சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக எழுதப்படும் அடிமைச்சாசனங்களை தட்டிக்கேட்டு, அதனை திருப்பி எழுத வைக்கும்  மையம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
இன்று ஆளுமையையப் பற்றி சிலர் பேசுகின்றனர். ஆளுமை  என்பது சாதித்துக் காட்டுவதாகும். அதனை நாம் தனிப்பட்ட முறையிலும், எமது கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஊடாகவும் சாதித்துக் காட்டியுள்ளோம். இம்முறை எமது தலைமையானது, புத்தளத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக, பல தியாங்கங்களையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்துள்ளது.
நாம் வெற்றிபெற்றால் யாருடன் கூட்டுச்சேர்வீர்கள்? எனக் கேட்கின்றனர். எமது முக்கிய குறிக்கோள்    அதுவல்ல. சிறுபான்மை முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்து, இந்த சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதே எமது முதலாவது குறிக்கோள் ஆகும்.  அபிவிருத்திகளும், தொழில்வாய்ப்புக்களும் எமது அடுத்தகட்ட செயற்படுகளாகும்” என்றார்.
இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா, முன்னாள் நகர சபை உறுப்பினர் யூசுப் நிஸ்தார், மக்கள் காங்கிரஸ் புத்தளம் தொகுதி இளைஞர் அமைப்பாளர் மிராஜ் பைருன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Post