Breaking
Fri. Apr 26th, 2024
இலங்கை துறை முக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் துறை முக அதிகார சபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கான 2019 ம் ஆண்டுக்கான  புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு  (21) சனிக் கிழமை மாலை கொழும்பு துறை முக அதிகார சபையின் மகாபொல பயிற்சி நிறுவனத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வானது  முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை ,புனர்வாழ்வு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்தமாக இடம் பெற்றுள்ளது.
 
இதில் கா.பொ.தா சாதாரண தரம்,உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் அதி விசேட சித்திகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கே இவ்வாறு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. 2016,2017,2018 ஆண்டுகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சுமார் 52 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
 
இதில் 2018 ம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையேயான நடாத்தப்பட்ட 16 வயதின் கீழ் ஓட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற பொல் ககவெல அல் இர்பான் மத்திய கல்லூரியின் மாணவனான ரஸ்மி அஹமட் அவர்களுக்கு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
இதில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மற்றும் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் துணைவியார் திருமதி பேரியல் அஷ்ரப் ,இலங்கை துறை முக அதிகார சபையின் உயரதிகாரிகளான கெப்டன் அதுல ஹேவாவிதாரன(முகாமைத்துவப் பணிப்பாளர்), மேலதிக பணிப்பாளர் உபாலி டீ சொய்சா,பிரதம பொறியியலாளர் சமன் தேவபிரிய, சிரேஷ்ட முகாமையாளர் கே.ஜீ.உபாலி,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உட்பட முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளர் சட்டத்தரணி ரம்சீன் உட்பட பலர் பங்கு கொண்டார்கள்..

Related Post