எஸ்.எம்.எம்.முர்ஷித்
பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லையென என்னால் காண முடிகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தாரும் இராப்போசன விருந்துபசாரமும் அதன் தலைவர் வை.கே.றஹ்மான் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டின் அரசியலுக்குள் ஒரு மதத்தின் கொள்கையாகக் காண்பிக்கின்ற திட்டத்திலே தான் நாங்கள் இந்த அரசியலை பேசிக் கொண்டிருக்கின்ற சமாந்தரமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் இனி வருங்கால கட்டங்களில் இவற்றுக்கு எல்லோரும் இயல்பாக நடந்து கொள்ள முடியுமென்கின்ற பார்வையிலே அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும் இன்முகத்துடன் செயற்படுவதில் தான் எங்களது செயற்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற பார்வை எம்மிடத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. கடந்த காலங்களிலே நாங்கள் இஸ்லாம் பரவிய, அவசரமாக பரவிப்போன நாடுகளை வைத்து தங்களுடைய நாடுகளையும் பறி கொடுத்து விடுவோமோ என்ற அச்சமும் அவர்களிடத்திலுள்ளது. எதிர்வரும் காலங்களில் எங்களிடத்திலே மாற்றுக்கருத்துக்கள் மூலம் விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்களுடன் நெருங்கிப் பழகுகின்ற விடயம் அவசரமாகச் செய்யப்பட வேண்டும். அண்மையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை அல்லது அமைச்சரவையைப் பகிஸ்கரித்துக் கொள்வதாக அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இறுதியாக எப்படி நடந்து கொள்வது பற்றிக் கூறுவதாக கட்சி பேதமன்றி பேசிக்கொண்டோம். மக்களுடைய வழிகாட்டலில் நல்ல அரசியலாக, ஆன்மீகமாக, கல்வியாக, கலை கலாசாரம் கொண்டதாக இருக்க வேண்டுமென வழிகாட்டுகின்ற ஒவ்வொரு நிறுவனமும் சமூகத்திலிருந்து தோல்வியடைய முடியாது என்றும் தெரிவித்தார்.