Breaking
Fri. Apr 26th, 2024

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன். அதேபோல் ஜனாதிபதி உட்பட பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அன்பளிப்பு செய்ய முன்வரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.

கம்பெரலிய செயற்றிட்டத்தினூடாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மேற்கொள்ளப்பட்ட நிதியோதுக்கீட்டின் கீழ் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலளுவெவ ஜும்மா பள்ளியின் மேல்மாடிக்கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. குறித்த வேலை தளத்திற்கு நேரடியாக சென்று மேற்பார்வை செய்த பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை புற்று நோய் மருத்துவமனைக்கு தேவையான 100 கோடி ரூபாய் பெறுமதியான இயந்திரங்களை கொள்வனவு செய்து குறித்த மருத்துவமனைக்கு வழங்குவதற்காக நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் ஒன்றிணைந்து அதற்கான நிதியினை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய நான் அனுராதபுர மாவட்டத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது பாராளுமன்ற சம்பளத்தை ஒதுக்கி வருகின்றேன். எனது ஒரு மாத சம்பளத்தின் அளவை எனது சொந்த நிதியிலிருந்து புற்று நோய் வைத்தியசாலைக்கு தேவைப்படும் அந்த இயந்திரத்தினை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கீடு செய்கின்றேன்.

அதேபோல் என்னோடு பாராளுமன்றில் இருக்கும் ஜனாதிபதி உட்பட 226 பேரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்களும் இதுபோன்று உங்களது ஒரு மாத பாராளுமன்ற சம்பளத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தியாகம் செய்ய முன்வரவேண்டும். அதேபோல் நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் சகல இன மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். இன, மத, குல பேதங்களை மறந்து எமது நாட்டு மக்களை பாதுகாப்போம் என்ற எண்ணத்தோடு தங்களால் முடிந்த அளவு உதவியினை இப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்ய முன் வாருங்கள். எமது இச்செயற்பாட்டால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. என தெரிவித்தார்.

Related Post