Breaking
Sat. Jul 27th, 2024
ஜேர்மனியில் ஐ.நா. விஞ்ஞானிக்கு ‘எபோலா’ நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. லைபீரியா, சியாரா லியோன், கினியா ஆகிய நாடுகளில் ஏராளமானோர் இந்த நோய்க்கு பலியானார்கள்.

உயிர்க்கொல்லி நோயான ‘எபோலா’ வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மருந்து கண்டுபிடித்து விடுவோம் என்று அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் லைபீரியாவில் ‘எபோலா’ நோய் தாக்கி அங்குள்ள வைத்தியசாலையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆப்ரகாம் போர்பர் பலியானார். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்கா தற்காலிகமாக கண்டபிடித்துள்ள மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

‘எபோலா’ நோய் தாக்கிய இரண்டு அமெரிக்கர்கள் இந்த மருந்து மூலம் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த மருந்து ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜப்பானும் ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடித்துள்ளது.

இதற்கிடையே ஜேர்மனியைச் சேர்ந்த ஐ.நா.விஞ்ஞானி ஒருவருக்கு ‘எபோலா’ நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஐ.நா. சபையின் உலக சுகாதார மையத்தில் பணியாற்றினார். அப்போது அவருக்கு ‘எபோலா’ நோய் தாக்கியது.

இதையடுத்து அவர் ஜேர்மனிக்கு திரும்பினார். பெர்லின் நகரில் உள்ள யுகேஇ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு ‘எபோலா’ நோய் தாக்கி இருப்பதை ஹெம்பர்க் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் ரோலண்ட் அக்ரென்ட் உறுதி செய்தார்.

Related Post