Breaking
Sat. Jul 27th, 2024

மக்கள் வதந்திகளை நம்பக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில முஸ்லிம் தலைவர்கள் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதாகவும் சொத்துக்கள் அழிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தினர். இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியிருந்தனர்.

சமூக அந்தஸ்த்தைப் பயன்படுத்தி இவ்வாறு ஊடகங்களில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் பதிவாவதனை தடுக்க முடியாது.

கடந்த காலங்களில் முஸ்லிம் சிங்கள வன்முறைகளைத் தூண்ட முயற்சிக்கப்பட்டது. நாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்பு ஒன்று இயங்கி வருகின்றது.

நாட்டில் வன்முறைகளைத் தூண்டும் நோக்கிலேயே புலிகள் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தினர். அரந்தலாவையில் பௌத்த பிக்குகளை கொலை செய்தனர். ஸ்ரீ மஹாபோதி மீது தாக்குதல் நடத்தினர். இந்த நோக்கத்தை புரிந்து கொண்ட மக்கள் பொறுமையுடன் செயற்பட்டனர்.

போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம் சமாதானத்தை மறந்து விட்டோம். அன்று வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற பொடியனுடன் மோதினோம்.

இன்று உலகின் பலம் மிக்க நாடான அமெரிக்காவுடன் மோதுகின்றோம் என்பதனை அனைத்து மக்களும் கவனத்திற் கொள்ள வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related Post