இந்த நாட்டிலே பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள சமூகத்தையும், சகோதரத்துடன் வாழும் முஸ்லிம் சமூகத்தையும் மோதவிட்டு பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு, நிம்மதியை குழைப்பதற்கு சதி செய்யப்பட்டுள்ளது என வர்த்தக மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியூதீன் தெரிவித்தார்.
ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை நிருவாகத்துடன் வைத்தியசாலை பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
மகிந்த அரவை விட்டு மைத்திரி அரசை கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்த போது அனைத்து முஸ்லிம் மக்களும் அலை அலையாய் திரண்டு வந்தனர்.
எங்களுடைய நிலைமைகள் கேள்விக் குறியாக உள்ளது. எமது சமூகம் அச்சத்தில் உள்ளது. எமது சமூகத்தில் அச்சத்தை போக்க ஒன்றுபட்ட சமூகத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்; கேட்டோம்.
மகிந்த அரசவை மாற்றியது போன்று மைத்திரி அரசை மாற்றுவதா அல்லது வேறு அரசை கொண்டு வருவதா என்கின்ற பல்வேறுபட்ட விடயங்களை பல அமைப்புக்களுடன் சேர்ந்து உரையாடினோம்.
தியாம் செய்து, பொருளாதாரத்தை செலவழித்து கொண்டு வந்த இந்த அரசுடன் போராடியாவது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், இனவாத சக்திகளை அடக்குங்கள், சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள் என்று எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டு வருகின்றோம்.
எமது சமூகத்தை, பொருளாதாரத்தை அழிக்க நினைக்கின்ற, நிம்மதியை குழைக்க நினைக்கின்ற கூட்டத்தை கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் செய்ய முடியாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதை தியாகம் செய்தாலும் பரவாயில்லை, அரசியல் அதிகாரம், அந்தஸ்து, பதவிகளை இழந்தாலும் பரவாயில்லை முஸ்லிம் சமூகத்தினுடைய மானத்தையும், மார்க்கத்தையும், பொருளாதாரத்தையும், இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அனைத்து விடயத்திலும் கரிசனை கொள்வோம்.
கடந்த காலத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்து வந்தனர். அதை குழப்ப நினைக்கின்ற சக்திகளை தோற்கடிப்பதற்காக கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்; என்றார்.
ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக முப்பது மில்லியன் ரூபாய் வர்த்தக மற்றும் வணிகத்துறை அமைச்சினூடாக கடனடிப்படையில் வழங்குவதுடன், வைத்தியசாலையின் தேவைக்காக அம்புலன்ஸ் வண்டி ஒன்றை பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.