மட்டக்களப்பு வாகரை வட்டவான் கிராம வீதியை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு – திருமலை வீதியை மறித்து வட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வட்டவான் கிராம மக்கள் பல வருட காலமாக பயன்படுத்திவந்த கடற்கரை வீதியை 2016ஆண்டு முதல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தனிநபரொருவர் குறித்த வீதி தனது தென்னம் தோட்ட காணிக்குள் அமைந்துள்ளதாக கூறி வீதியை அடிக்கடி சேதமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பிரதேச மக்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த வீதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாகரைப் பிரதேச செயலகம், பிரதேச சபை, மீன்பிடித் திணைக்களம் மற்றும் கரையோர பேணல் திணைக்களம் போன்றவற்றுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை பொதுமக்களின் பயன்பாட்டுக்கான பாதையை மக்களின் போக்குவரத்துக்கான வீதியாக மாற்றித் தர நடவடிக்கையெடுக்குமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்ட இடத்திற்கு வரகை தந்த கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்ட காரர்களுடன் உரையாடியதுடன் இது தொடர்பாக உரிய டவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.
அரசியல்வாதிகளிடம் இதற்கான தீர்வினைப் பெற்றுத்தருமாரு மகஜர் கையளிக்கபட்டதுடன் இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக அரசியல்வாதிகளால் உறுதிவழங்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.