Breaking
Sun. Apr 28th, 2024

முன்னாள் அதிபர் அமானுல்லாஹ் ஆசிரியரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மன்னார் தாராபுரத்தில் சிறந்த கல்விக்குடும்பத்தில் பிறந்த அவர், நீண்ட காலம் நல்லாசிரியராகவும் திறமை மிக்க அதிபராகவும் பணியாற்றியவர். அவரது தந்தையார் ஒரு புலவர் ஆவார். . எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத ஒருவராக அவர் இருந்தார். தந்தையைப்போல எனது அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்குபவராகவும் உற்சாகம் அளிப்பவராகவும் இருந்து அந்தப் பணிகளில் என்னுடன் இணைந்து செயற்படுபவராகவும் விளங்கினார். ஆரம்பம் முதல் எனது அரசியல் பணிகளில் ஆர்வமுடன் இணைந்து சமூக நலப் பணிகளுக்கு பக்க பலமாக நின்று பணியாற்றியவர். அமைச்சின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாகவும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்து அவர் ஆற்றிய பணிகள் மறக்கமுடியாதவை அவரிடம் உதவி நாடிவருபவர்கள் அவரை ஒரு தந்தையாகவே மதித்தனர்.
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து அகதியாக வாழ்ந்த மக்களின் நல்வாழ்வுப்பணிகளுக்கும் மீள்குடியேற்றப்பணிகளுக்கும் அவர் பெரிதும் உழைத்து வந்தார். அகதிகளின் கஸ்டங்களை நன்குணர்ந்து செயற்பட்டவர் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களை உள்ளன்போடு அழைத்து உதவி செய்யும் நல்ல மனப்பாங்கு கொண்டவர்.
அன்னார் நல்ல நிர்வாகத்திறமை கொண்டவர். சிறந்த பேச்சாளராகவும் இருந்த அவர் அனைவராலும் விரும்பப்பட்டவர். எவருடனும் அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டவர். அமைச்சில் பணியாற்றிய காலங்களில் இன,மத பிரதேச அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தனது பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கினார்.

அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தாருக்கும் சமூகத்துக்கும் மாத்திரமன்றி எனக்கும் தனிப்பட்ட ரீதியில் பாரிய இழப்பாகும்.
அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *