இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான அருண் செல்வராஜாவுக்கு போலி கடவுச் சீட்டு தயாரிப்பாளர்களுடன் தொடர்பிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
அருண், கடந்த 10 ஆம் திகதி தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது இவர் 5 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து நாசவேலைக்கு சதிதிட்டம் தீட்டியதும் அம்பலமானது.
அருண்செல்வராசனை, பாகிஸ்தான் உளவாளியாக மாற்றியதில் அதிகாரிகள் 2 பேர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்துவதற்காக கடந்த 18ஆம் திகதி அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.
இதில் பல்வேறு முக்கிய தகவல்களை அருண் செல்வராசன் கூறியுள்ளார். இவை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்துள்ள அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அருண் செல்வராசனிடம் இருந்து போலி கடவுச் சீட்டு, எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ், பான்கார்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து புரோக்கர்கள் மூலமாக அருண் செல்வராசன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை பொறுத்தவரை போலி சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பல் அவ்வப்போது கைதாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுங்கையூர் எனும் பகுதியில் போலி சான்றிதழ்களை தயாரித்த மோசடிக் கும்பல் சிக்கியது.
இவர்கள் மூலமாகவே பாகிஸ்தான் உளவாளியான அருண் செல்வராசன் போலி எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை வாங்கியிருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலி சான்றிதழை தயாரித்து கொடுத்த கும்பலின் உதவியுடன்தான் போலி கடவுச்சீட்டுக்களையும், பான்கார்டுகளையும் அருண் செல்வராசன் வாங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. (SO)