Breaking
Sat. Apr 27th, 2024

கடந்த காலங்களில் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை வெட்டியது, கொள்ளையடித்தது, கொலை செய்தது வெறிபிடித்தவர்கள் இப்போது வந்து ஜனநாயக அமைப்பை பற்றி அல்லது முஸ்லிம் தமிழ் உறவைப்பற்றி, முஸ்லிமுக்கு கொடுக்கப்பட்ட ஆளுனரை பற்றி பேச வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியாத சூழல் காணப்படுகின்றது என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி 3ம் வட்டார கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்த நாட்டில் ஜனநாயகத்தை புதைக்க முற்பட்ட பொழுது இந்நாட்டின் சிறுபான்மை சமூக கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாத்து பெருமை பெற்றவர்கள் நாங்கள்.

எங்களுக்குள் ஒரு சிறிய அலுவலகம் திறப்பதில் நாங்கள் எதிரும் புதிருமாக இருந்து செயற்பட்டால் தேசியத்தில் பாடம் படித்து கொடுத்த சிறுபான்மை சமூகமாகிய நாங்கள் அதற்கு பதில் கொடுக்க முடியாதவர்களாக போய் விடுவோம் என்ற கவலை என்னிடத்தில் இருக்கின்றது. எனவே அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் தெளிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது.

சில்லை அரசியலுக்காக அல்லது கடந்த காலங்களில் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை வெட்டியது, கொள்ளையடித்தது, கொலை செய்தது வெறிபிடித்தவர்கள் இப்போது வந்து ஜனநாயக அமைப்பை பற்றி அல்லது முஸ்லிம் தமிழ் உறவைப்பற்றி, முஸ்லிமுக்கு கொடுக்கப்பட்ட ஆளுனரை பற்றி இப்போது பேச வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியாத சூழலிலே உள்ளது என்பது தெளிவாகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை விழுத்த முடியாமல் இருக்கின்ற காரணத்தினால் வேறு நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதனை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாதை, அதன் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் இந்த நாட்டில் எடுத்துக் கொண்டு செல்லப்படுகின்ற விடயம் தமிழ் பேசும் சமூகத்துக்கு எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற பார்வை இதனை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அவரது சிரேஷ்டத்துவம் என்னுடைய வயதிலும் இருக்கும் அவரது அனுபவம் என்று நான் நினைக்கின்றேன்.

இவ்வாறான அரசியல் தலைவர் இருக்கின்ற காலகட்டத்திலே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு அலுவலகம் திறப்பதிலே அறுவறுப்பான விடயங்கள் அரங்கேறுவது இந்த மாவட்டத்தில் இருக்கின்ற சில உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதில் தெளிவோடு பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் வடக்கு கிழக்கை பற்றி பேசுகின்றீர்கள் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு வரவேண்டும் என்று பேசுகின்றீர்கள். எங்களுடைய கடந்த கால பிரச்சனைகளை மறந்து விடுவோம் என்று பேசுகின்றோம். இப்போது பேசுவதாக இருந்தால் உங்களிடத்தில் இருந்து எதையுமே இழந்து போக முடியாது. அல்லது உங்களது அடிப்படை உரிமையை மீறப்படாத ஒரு வேலைத் திட்டமான ஒரு அலுவலகத்தை, ஏற்கனவே அமைச்சுக்கு சொந்தமான அலுவலகத்தை திறக்க முற்படும் போது தடுக்க முற்படுவது இன விரோதத்தின் உச்சகட்டம் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா மற்றும் நான் கௌரவமாக பார்க்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைவர்களுக்கு இதனை சமர்ப்பணமாக செய்ய வேண்டி இருக்கின்றது.

போராட்ட காலத்தில் நாங்கள் எதையும் பேச முடியாது, எதையும் செய்ய முடியாது. இப்போது நல்லாட்சி காலத்தில் போராட்டம் முடிந்து விட்டது ஜனாநயகத்தின் பால் பெறடியும் என்ற நம்பிக்கையிலும் நாங்கள் கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது.

கல்குடாத் தொகுதியில் வாகனேரி குளத்தை நம்பி இருக்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகம் நன்மையடைய வேண்டும் என்பதற்காக அமைச்சை பொறுப்பேற்ற பிறகு வாகனேரி குளத்தை நம்பி இருக்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகம் நன்மை பெற வேண்டும் என்பதற்காக புதிய நீர்ப்பாசன காரியாலயம் அமைக்க முனைந்து கொண்டிருக்கின்ற வேளையில் இது சம்பந்தமான கூட்டம் நடைறெ;ற போது இளைஞர்களது இனத்துவேசமான கருத்துக்களை பார்க்கின்ற போது நாங்கள் அச்சப்படுகின்றோம், பயப்படுகின்றோம்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து பயணிப்பது என்கின்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதில் தமிழ் அரசியல் தலைவர்கள் மௌனமாக இருப்பதை நாங்கள் கவலையாக பார்க்கின்றோம். தமிழ் அரசியல் தலைவர்கள் தெளிவாக சொல்ல வேண்டும். ஒரு அலுவலகம் முஸ்லிம் பகுதிக்கு வருவது தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமையை பறித்து எடுக்கின்ற விடயம் இல்லை என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் வாய் திறந்து பேச தவறுவதாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கான அந்த சந்தர்ப்பத்தை அவர்களால் இழுத்து மூடப்படுகின்ற ஒரு நிகழ்வாக பார்க்க முடிகின்ற அச்சம் எங்களிடத்தில் இருக்கின்றது.

நாங்கள் கொண்டு வருவது ஒரு சமூகத்திடம் இருந்து பறிந்தெடுத்து கொண்டு வந்த செயற்பாடு அல்ல. பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய அலுவலகம். இந்த பிரதேசத்தில் இருந்த இதற்கு பொறுப்பான அரச அதிகாரிகள் சரியான முறையில் கையாளாகாத காரணத்தினாலும், அக்காலத்தில் இருந்த அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாத காரணத்தினாலும் தான் இதனை செய்ய முடியும் என்று முயற்சிக்கின்ற பொழுது மாவட்டத்திற்கு நல்லதொரு வேலைத் திட்டத்தை கொண்டுவர முற்படுகின்ற பொழுது இனத்துவேசமாக பார்க்கின்ற பார்வை ஒரு சிறிய சில்லறை அரசியல் செய்கின்றவர்கள் இடத்தில் இருப்பதை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பான்மை செலுத்துகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனமாக இருக்க கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஓட்டமாவடி 3ம் வட்டார கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எம்.ஐ.புஹாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதி தவிசாளர் யூ.எல்.லெப்பை, பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அமீர், எம்.பி.ஜௌபர், ஏ.எம்.நௌபர், திருமதி.பாயிசா நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஹாதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி 3ம் வட்டார பகுதியில் புலமைப் பரீட்சையில் வெட்டிப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களுக்கும், பரீட்சை திணைக்களத்தால் சித்திபெற்ற சான்றிதழ் வழங்கப்பட்ட 67 மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்த கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளை இராங்க அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவித்துடன், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அமீர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

மேலும் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கியதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது.

Related Post