Breaking
Sun. May 19th, 2024

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முற்படுவதே பிரச்சினைகளுக்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.19வது திருத்தத்தை அவசரமாகக் கொண்டு வருவது உசிதமல்ல என தெரிவித்த அமைச்சர், கலந்துரையாடல்களுக்கு வாய்ப்பளித்து இரு தரப்பினரதும் கருத்துக்கள் பெறப்படுவது முக்கியமெனவும் இவ்விடயத்தில் அவசரமாக முடிவெடுப்பது உகந்ததல்ல என்றும் தெரிவித்தார்.

19வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்து வருகின்ற நிலையில் ‘ஹெல உறுமய’ கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் 19வது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்கப் போவதில்லை என எதிர்த்து வருகிறார். இந்நிலையில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜிதவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

19வது திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற எடுக்கும் நடவடிக்கைகளே தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் காரணம். நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக் கப்பட வேண்டும். அல்லது அதிலுள்ள பலமான அதிகாரங்கள் இல்லாதொழிக் கப்பட வேண்டும். இவை இரண்டையும் நான் ஏற்றுக்கொள்வேன்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார பலத்தைப் பிரதமர் அபகரித்துக்கொள்ள முயற்சிக்கும் சூழ்ச்சியாகவே 19வது அரசியலமைப்புத் திருத்தம் அமைந் துள்ளதென அமைச்சர் சம்பிக்க ரணவிக்க விமர்சித்து வருகிறார். எது எவ்வாறெனினும் மக்கள் ஆணையைப் பெற்று பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை அவ்வாறு எதுவுமில்லாத பிரதமர் பெற்றுக்கொள்ள முனைவதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்அவ்வாறென்றால் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கன்றி அமைச்சரவைக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறல் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவசர அவசரமாக 19வது அரசியலமைப்பை நிறைவேற்ற முற்படுவது உகந்ததல்ல. இரு தரப்பினரிடையேயும் சுமுகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று தீர்மானத்துக்கு வரவேண்டியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, 19வது திருத்தம் தொடர்பில் நேற்று கட்சித் தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

அத்துடன் 19வது திருத்தம் தொடர் பிலான உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் பாராளுமன்றத்துக்கு இன்று அறிவிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. சட்ட மா அதிபரின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்பே உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *